ஒரே கிளிக்.. நடுரோட்டில் வாகனங்கள் நிறுத்தும் சீன செயலி? பதற வைக்கும் சம்பவம்! என்ன நடக்கிறது?
இந்தூர்: மொபைல் செயலி மூலம் மின்சார ஆட்டோக்களை நடுரோட்டில் ஆஃப் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலக்டிரிக் ஆட்டோக்களை இதுபோல ஆஃப் செய்துவிட்டு பிறகு தொழில்நுட்ப நிபுணர் போல் நடித்து, அவற்றைச் சரிசெய்து தருவதாக கூறி ஓட்டுநர்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்த காலத்தில் ஒரு பக்கம் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. இது மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. அதேநேரம் மறுபுறம் அதே தொழில்நுட்பத்தை வைத்து நடக்கும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.

மோசடி
அதாவது இளைஞர் ஒருவர் தனது செல்போன் செயலியை வைத்து தொலைதூரத்தில் இருக்கும் ஆட்டோக்களை ஆஃப் செய்திருக்கிறார். நள்ளிரவு நேரங்களில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செல்லும் இ-ரிக்ஷாக்களையே அவர்கள் இதுபோல குறிவைத்துள்ளனர். மொபைல் செயலி மூலம் அந்த வாகனங்களைத் தூரத்திலிருந்தே திடீரென முடக்கியுள்ளனர். திடீரென நடுரோட்டில் ஆட்டோ நின்றுவிட்டதால் தவித்த ஓட்டுநர்களை அணுகி, தாங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று கூறி சில நிமிடங்களில் வாகனத்தை மீண்டும் இயக்கியுள்ளனர்.
இதற்குக் கட்டணமாக ஓட்டுநர்களிடம் இருந்து 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும், சில நேரங்களில் அதற்கு மேலும் பணம் வசூலித்துள்ளனர். இதுபோல தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாகக் குற்றப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் முதற்கட்டமாக ரித்தேஷ் பானுபா என்ற 18 வயது இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதேபோல சில பிராங்க் வீடியோக்களும் இணையத்தில் வலம் வந்துள்ளது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ன நடக்கிறது
மின்சார வாகனங்களின் பேட்டரிகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயலி தான் பேட் பிஎம்எஸ். இதை வைத்தே அந்த இளைஞர் எலக்டிரிக் ஆட்டோக்களை முடக்கியதாக தெரிகிறது. இது மின்சார வாகன பேட்டரியின் மூளையாகச் செயல்படுகிறது. பேட்டரியின் ஆயுள், சார்ஜிங் அளவு, வெப்பநிலை, வோல்டேஜ் மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை இது கண்காணிக்கும். ப்ளூடூத் அல்லது இணைய வசதி மூலம் இந்தத் தகவல்களை மொபைலில் பார்க்க இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் விற்கப்படும் பெரும்பான்மையான எலக்டிரிக் ஆட்டோக்களில் இந்த பேட் பிஎம்எஸ் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப குறைபாடு
இந்த செயலியை பயன்படுத்தி அருகே உள்ள பேட்டரிக்களில் ஈஸியாக கனெக்ட் செய்யலாமாம். அப்போது பாஸ்வோர்ட் தேவைப்படாது. இந்த குறைபாட்டை வைத்தே அவர்கள் ஹேக் செய்துள்ளனர். ப்ளூடூத் வரம்பிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பேட்டரி அமைப்பில் நுழைந்து ஆட்டோவை இதுபோல ரிமோட் மூலமாக முடக்க முடியுமாம். இதுவே பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது. மேலே சொன்ன மோசடி நிகழ்வு மட்டுமின்றி, இதை வைத்து சிலர் பிராங்க் வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் இந்தத் தொழில்நுட்பக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டது.
மக்கள் அச்சம்
பொதுவாகவே ஆட்டோக்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், பள்ளிகள் மற்றும் குறுகிய சாலைகளிலேயே இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழலில், திடீரென வாகனம் நிறுத்தப்பட்டால் பெரும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்களைக் கட்டுப்படுத்தும் இதுபோன்ற தொழில்நுட்பங்களில் வலுவான பாதுகாப்பு அமைப்பு தேவை என்றே மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் நமக்கு இன்னொரு கேள்வியும் வருகிறது. மின்சாரக் கார்களும் பேட்டரிக்கள் மூலமாகவே இயங்கும் நிலையில், அதையும் இதுபோல முடக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரக் கார்களில் இவ்வளவு எளிதாக யார் வேண்டும் என்றாலும் ஹேக் செய்ய முடியாது. அவை மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகின்றன.இதனால் கார்களை அவ்வளவு சீக்கிரம் ஹேக் செய்ய முடியாது.














Click it and Unblock the Notifications