Explained: மத்திய அமைச்சர் ஒருவரை மாநில போலீசார் கைது செய்ய முடியுமா? சட்டம் சொல்வது என்ன?
மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரை மாநில போலீசார் கைது செய்ய முடியுமா என்று கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்தவர்கான விதிமுறை என்னவென்று பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இன்று மும்பையில் மகாராஷ்டிரா போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது மூன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு பெயிலில் வெளியே வர முடியாத பிரிவுகளிலும் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தனக்கு எதிராக பதியப்பட்ட எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட்டில் இவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மும்பை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் நடந்த ஜன் ஆசீர்வாத யாத்திரை யாத்திரையில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று கூறியது பெரிய சர்ச்சையானது. இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூட அவருக்கு தெரியாமல் உதவியாளரிடம் கேட்கிறார். அவர் இப்படி பேசும் போது நான் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் பேச்சு சர்ச்சையான நிலையில் மும்பை போலீசார் இன்று இவரை கைது செய்தனர்.
மத்திய அமைச்சர் ஒருவர் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டது பெரிய அளவில் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சரை மாநில போலீசார் எப்படி கைது செய்யலாம் என்று பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

இந்தியாவில் மத்திய அமைச்சர் ஒருவரை கைது செய்ய முடியுமா?
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்காத பட்சத்தில் அமைச்சர் ஒருவரை கைது செய்ய முடியும். சட்ட விதி பிரிவு 22 ஏ- வின் படி ராஜ்ய சபா எம்பியாகவும் அமைச்சராகவும் இருக்கும் ஒருவரை கைது செய்யும் முன் ராஜ்ய சபா சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும். அவரை ஏன் கைது செய்கிறோம் என்று தெரிவிக்க வேண்டும். அதோடு அவரை கைது செய்வதற்கான வழக்கு பிரிவு விவரங்கள், எங்கே கைது செய்யப்பட்டு அடைக்கப்பட உள்ளார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். நாராயண் ரானே ராஜ்ய சபா எம்பி. லோக்சபாவில் இருக்கும் உறுப்பினர்களை கைது செய்ய நினைத்தாலும் இதே விதிதான்.
கைது செய்யப்பட்ட விவரம் எப்படி தெரிவிக்கப்படும்?
அமைச்சர் ஒருவரோ அல்லது எம்பி ஒருவரோ கைது செய்யப்பட்ட பின் அது குறித்து சபாநாயகர் பாராளுமன்ற அவையில் கவுன்சிலுக்கு தெரிவிப்பார். பாராளுமன்ற அவை கூடாத பட்சத்தில் இது தொடர்பாக மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்ற செய்தி குறிப்பு தகவல் வெளியிடப்படும்.
கைதில் இருந்து பாதுகாப்பு உள்ளதா?
ஆம் நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் கைதில் இருக்கும் பாதுகாக்கும்படி சில சலுகைகள் உள்ளன. அதன்படி விதி எண் 135ன் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்னர், கூட்டத்தொடர் முடிந்து 40 நாட்கள் வரை கைது செய்ய முடியாது. கூட்டத்தொடர் நடக்கும் போதும் கைது செய்ய முடியும். ஆனால் இது சிவில் கேஸ்களுக்கு மட்டுமே. மொத்தம் மூன்று பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் நடக்கும். 40 நாட்கள் இடைவெளி வைத்து கணக்கிட்டால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வருடத்தில் 300 நாட்கள் தவிர மற்ற நாட்கள் மட்டுமே கைது செய்ய முடியும். ஆனால் இது கிரிமினல் கேஸ்களுக்கு பொருந்தாது. கிரிமினல் கேஸ்கள், பெயிலில் வெளியே வர முடியாத கேஸ்களில் கைது செய்ய இந்த கட்டுப்பாடுகள் கிடையாது. கூட்டத்தொடர் நடக்காத போது கண்டிப்பாக சபாநாயகரிடம் தெரிவித்துவிட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்கள் மூலம் கைது செய்ய முடியாத ஒரே நபர் குடியரசுத் தலைவர் மட்டுமே. பிரதமருக்கு கூட கிரிமினல் குற்றத்தில் இருந்து கைது செய்யப்படாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அமைச்சர் ஒருவரை கிரிமினல் குற்றம் அல்லது பெயிலில் வெளியே வர முடியாத குற்றங்களில் கைது செய்ய மாநில போலீசாருக்கு எந்த தடையும் இல்லை.
கைது செய்ய முடியாது?
அதேபோல் பாராளுமன்றத்தில் கைதுகளை மேற்கொள்ள முடியாது. அவை உறுப்பினராக இருந்தாலும் சரி வெளி ஆட்களாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் கைது செய்ய முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரிடம் இதற்காக அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இது அரிதிலும் அரிதான நடவடிக்கை.
இப்போது அவை நடக்கிறதா?
இப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியே கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. இதனால்தான் தற்போது மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிரா போலீசார் மூலம் சிக்கலின்றி கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications