வாங்கிய கடனை முதலில் கொடுங்க... நடிகர் கார்த்தியின் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "வா வாத்தியார்" திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான ‛ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் வாங்கிய ரூ.10.36 கோடி கடனை செலுத்தும் வரை படத்துக்கு இடைக்கால தடை போடப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‛வா வாத்தியார்'. பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ் , ராஜ்கிரண் , ஆனந்தராஜ் , ஷில்பா மஞ்சுநாத் , கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம் ‛ஸ்டுடியோ கிரீன்' தயாரித்துள்ளது. இவர் நடிகர் கார்த்திற்கு உறவினர் ஆவார். இந்த திரைப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தங்களிடம் இருந்து ‛வா வாத்தியார்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றது. இந்த தொகையை சொன்னபடி திரும்ப தரவில்லை. இதனால் கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கார்த்தியின் ‛வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த திரைப்படம் குறித்த தினத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
திரைப்படத்துக்கான அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியானது. ‛கார்த்தி 26' என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அப்போது தான் ‛வா வாத்தியார்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் தொடர்ந்து தாமதமானது. டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்போது இடைக்கால தடை விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications