சகாப்தம் முடிந்தது.. தர்மேந்திரா, ஹேமமாலினியை கைப்பிடித்த கதை.. மதம் மாறினாரா? யாரந்த ஷோபா
சென்னை: 60 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தர்மேந்திரா.. மிகவும் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர்.. நடிப்பு ஒன்றையே மூச்சாக நினைத்து வாழ்ந்தவர் தர்மேந்திரா.. இன்னும் சில நாட்களில் இவர் நடித்த 'Ikkis' என்ற படம் வெளியாக போகிறது. தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதி என்றாலே இந்தியா முழுவதும் பிரபலம்.. அன்று ஹேமமாலினியை தர்மேந்திரா திருமணம் செய்தது எப்படி தெரியுமா?
சினிமாவில் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்வது இயல்பான விஷயமே.. ஆனால், தர்மேந்திரா - ஹேமமாலினி திருமணம் மட்டும், அன்றைய தினம் இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு பரபரப்பை தந்துவிட்ட திருமணமாகும்..

ஷூட்டிங்கில் காதல்
திருச்சியை சேர்ந்த ஹேம மாலினியின் அப்பா, டெல்லியில் வேலை பார்த்து வந்தார்.. இதனால் டெல்லியிலேயே வளர்ந்தார் ஹேம மாலினி..
1980ல், அதாவது தர்மேந்திரா சினிமாவுக்குள் நுழைந்து அடுத்த 10 வருடம் கழித்துதான், முதல்முறையாக ஹேம மாலினியுடன் ஜோடியாக நடித்தார். தும் ஹசீன் மெயின் ஜவான்" (Tum Haseen Main Jawan) என்ற பட ஷூட்டிங்கில்தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
தர்மேந்திரா - ஹேம மாலினி
அதற்கு பிறகுதான் இவர்களின் ஜோடி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால் அப்போதே தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கவுருடன் திருமணமாகி குழந்தைகள் இருந்தன.. ஆனால் திருமணமான தர்மேந்திராவை, தன்னுடைய மகள் 2வதாக திருமணம் செய்வதை ஹேம மாலினியின் பெற்றோர் விரும்பவில்லை.
இதே காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்த ஜிதேந்திராவுக்கு ஹேமமாலினி மீது ஒருவித ஈர்ப்பு இருப்பதை அறிந்த ஹேமமாலினியின் பெற்றோர், ஜிதேந்திராவுக்கே மகளை திருமணம் செய்து வைக்க தயாரானார்கள். தர்மேந்திராவுக்கு திருமணமாகாமல் இருந்ததே பெற்றோரின் இந்த சம்மதத்துக்கு முக்கிய காரணமாகும்.
ஜிதேந்திராவுடன் திருமணம்
பெற்றோரின் விருப்பத்தை மீறி முடியாமல், ஜிதேந்திராவை திருமணம் செய்ய மனமின்றி ஒப்புக் கொண்டார் ஹேமமாலினி. திருமணத்தை சென்னையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, தர்மேந்திராவின் காதுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது.
உடனே ஷோபா என்ற விமான பணிப்பெண்ணை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்தார்.. இந்த ஷோபாவைதான் ஜிதேந்திரா ஏற்கனவே காதலித்து வந்தார். ஹேமமாலினியுடன் திருமணம் என்றதுமே, ஷோபாவை கைவிடவும் துணிந்திருந்தார்.
திடீரென ஷோபாவை பார்த்ததுமே ஜிதேந்திரா விழிக்க, ஒருவழியாக ஹேமமாலினியின் திருமணம் நின்று போனது.. இதற்கு பிறகு 1980ல் ஹேமமாலினியை தர்மேந்திரா 2வதாக திருமணம் செய்தார்.
மதம் மாறி திருமணம்?
ஆனால் அப்போதும் இந்த காதல் ஜோடியை பிரச்சனைகள் விரட்டி வந்தன.. முதல் மனைவி இருக்கும்போதே, அவரை விவாகரத்து செய்யாமல் தர்மேந்திரா எப்படி ஹேமமாலினியை திருமணம் செய்யலாம்? என்ற சர்ச்சைகள் வெடித்தன.. இந்து திருமண சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலை பிரபல நடிகர் தர்மேந்திரா செய்துவிட்டதாகவும் சலசலப்புகள் எழுந்தன.
இதற்கு பிறகு, தர்மேந்திரா, ஹேமமாலினி இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டதாகவும், தர்மேந்திரா தன் பெயரை திலாவர் என்றும், ஹேமமாலினி ஆயிஷா பி என்றும் மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் கசிந்தன.. ஆனால், இந்த தகவலை அப்போதே தர்மேந்திரா மறுத்திருந்தார். சுயலாபத்துக்காக நான் மதம் மாறினேனா? குற்றச்சாட்டை நிரூபியுங்கள் பார்க்கலாம் என்றும் கொந்தளித்தார்.
புரட்சிகரமான திருமணம்
பின்னர், முதல் மனைவியிடமிருந்து விவாகரத்துக்கு பெற்று, தர்மேந்திரா, ஹேமமாலினியை ஐயங்கார் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இப்படி பலவிதமான பரபரப்புகளை இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் அந்நாட்களில் ஏற்படுத்தியதுடன், புரட்சிகரமான திருமணம் என்றும் பாலிவுட் பத்திரிகைகளால் பேசப்பட்டது.
இந்த தம்பதிக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற இரு மகள்கள் உள்ளனர். ஆனால், தர்மேந்திராவுடன் ஒன்றாக சேர்ந்து வாழும் சூழல் ஹேமமாலினிக்கு வரவில்லை.. அதற்காக தர்மேந்திராவின் முதல் குடும்பத்தை அவர் குழப்பவும், விரும்பவில்லை.
பிரிந்து வாழ்ந்த ஹேம மாலினி
ஒரு பேட்டியில் ஹேம மாலினி சொல்லும்போது, "நான் எப்போதும் என் கணவரைக் கண்காணிக்க வேண்டும் என்றோ, அவர் எங்கே போகிறார் என்று விசாரிக்க வேண்டும் என்றோ நினைத்ததில்லை. அவர் தன் கடமைகளைச் சரியாகச் செய்வார் என்று எனக்குத் தெரியும்..
அவர் காலையில் 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்வார். எனக்கு அந்த ரொட்டீன் கிடையாது. அதனால் தனித்தனி வீடுகளில் இருந்தாலும் உறவு பாதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். பொது இடங்களிலும் தர்மேந்திராவை விட்டுக் கொடுக்காமலேயே ஹேம மாலினி பேசியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications