ஜனநாயகன் பிரச்சனைக்கு இதனால் தான் குரல் கொடுக்கல! இவ்வளவு விஷயம் இருக்கு! ஓபனா பேசிய விஷால்
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக பேசப்பட்ட படம் தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது இறுதிப் படம் ஜனநாயகன். அரசியல் களத்திற்குள் நுழைய இருக்கும் நிலையில் வெளிவரவிருந்த இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் நிறைந்த விடைபெறல் படமாகவே பார்க்கப்பட்டது. அதனால் தான் பொங்கல் ரிலீஸாக வர இருந்த இந்த திரைப்படத்தைச் சுற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால் ரிலீஸுக்கு சில வாரங்களுக்கு முன்பே படம் சென்சார் கட்டத்தில் சிக்கிக் கொண்டது. மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் அனுமதி தாமதமானதால் வெளியீட்டு தேதி தொடர்ந்து வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்பது உறுதியாகி, திரையரங்குகளும் விநியோகதிரையரங்குகளும் படங்களை பொங்கல் ரிலீஸாக கொண்டு வந்தனர்.

அந்த போட்டியில் வந்த சில படங்கள் ஓரளவு ஓடியாலும், பெரிய அளவில் பேசப்பட்ட பராசக்தி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் "ஜனநாயகன் வந்திருந்தால் பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும்" என்ற பேச்சு திரையுலகில் கிளம்பியது.
இந்த சூழலில் நடிகரும் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஷால் அளித்த பேட்டி வைரலாகியுள்ளது. விஷால் பேசும்போது, ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சினை குறித்து ஒருவரோ இருவரோ மட்டும் குரல் கொடுத்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது; தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று விஷால் வலியுறுத்தினார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால் தான் சென்சார் போர்டில் என்ன பிரச்சினை? ஏன் இப்படியான தாமதம்? என்ற கேள்விகளை அதிகாரபூர்வமாக எழுப்ப முடியும் என்றார். அதே நேரத்தில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் சங்கம் நேரடியாக தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
"வழக்கு கோர்ட்டில் இருக்கும்போது எங்களால் வெளியில் வந்து போராட முடியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியிருந்தால் ஒரு கூட்டுக் குரல் எழுப்பியிருக்கலாம்" என்றார். மேலும், 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்க்கும் ஒரு பெரிய திரைப்படத்தின் விதியை நான்கு அல்லது ஐந்து பேர் மட்டும் தீர்மானிப்பது குறித்து தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும் அது தற்போதைய விதிமுறை என்பதால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை தான் என்று கூறினார்.
இதன் மூலம் சென்சார் அமைப்பின் கட்டமைப்பு குறித்து திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தினார். ஜனநாயகன் படத்தின் தாமதத்திற்கு காரணமாக கூறப்படும் விஷயங்களில் முக்கியமானவை - படத்தின் அரசியல் சார்ந்த கண்டனட், சில வசனங்கள் மற்றும் காட்சிகள் மீதான தணிக்கை குழுவின் எதிர்ப்பு, மறுசீரமைப்பு கோரிக்கைகள், அதனை எதிர்த்து தயாரிப்பு தரப்பின் சட்டநடவடிக்கை - இவை அனைத்தும் சேர்ந்து ரிலீஸை நீட்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த தாமதம் வெறும் ஒரு படத்தின் வெளியீட்டு பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒரு நட்சத்திரத்தின் இறுதி திரைப்படம், அதற்காக காத்திருந்த ரசிகர்கள், திரையரங்கு வட்டாரம், விநியோகஸ்தர்கள் என முழு துறையையும் பாதித்த ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இப்போது படம் எப்போது வெளியாகும்? சென்சார் பிரச்சினை எப்போது தீரும்? விஜயின் கடைசி திரைப்படம் ரசிகர்களை எப்போது சந்திக்கும்? என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.












Click it and Unblock the Notifications