ஜனநாயகன், பராசக்தியை சுற்றும் பிரச்சனை.. இதில் இவ்வளவு கஷ்டம் இருக்கு! கார்த்திக் சுப்புராஜ் ஆதங்க பதிவு
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை (ஜனவரி 9) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நேரடியாக 'ஜனநாயகன்' மற்றும் பராசக்தி படங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தற்போதைய தமிழ் சினிமா சந்திக்கும் நெருக்கடியை பற்றி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், குறைந்த பட்ஜெட் இன்டி(சண்டியர்கள்) திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், அதே நேரத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள உயர் பட்ஜெட் படங்களே சென்சார் தாமதம் காரணமாக வெளியீட்டில் சிக்கல் சந்தித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நாளை வெளியாக இருந்த (ஜனநாயகன்) ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் ஒத்திவைக்கப்பட்டதும், மறுநாள் வெளியாக இருந்த (பராசக்தி) மற்றொரு பெரிய படத்திற்கு இன்னும் பல இடங்களில் முன்பதிவு தொடங்காததும், திரையுலகின் தற்போதைய கடின சூழலை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைமுறையில் உள்ள சென்சார் காலக்கெடு விதிமுறைகள், படைப்பாளிகளுக்கு குறிப்பாக post-production கட்டத்தில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய விதிகளின்படி, ஒரு திரைப்படம் வெளியீட்டுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையாக தயாராக இருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இது பல நடைமுறை சிக்கல்களால் சாத்தியமற்றதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக பெரிய படங்கள் திருவிழா காலங்களில் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டால், அது மொத்த திரையுலகையே பாதிக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் எச்சரித்துள்ளார். ரசிகர் மோதல்கள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விரோதங்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்து, திரைப்படக் கலைகளை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இந்த பதிவு, தற்போது 'ஜனநாயகன்' படத்தின் திடீர் ஒத்திவைப்புடன் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டு வரும் நிலையில், சென்சார் நடைமுறைகள் குறித்து திரையுலகில் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்போது திரை துறையில் இருப்பவர்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications