கருப்பு படம் பார்க்க வந்த திரிஷா! சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்.. தியேட்டரில் நடந்த எதிர்பாராத சம்பவம்
சென்னை: பல தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியான "கருப்பு" திரைப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. பல மாதங்களாக பைனான்ஸ் மற்றும் விநியோக பிரச்சனைகளால் தள்ளிப்போன இந்த படம், கடைசியாக ரிலீஸ் உறுதி செய்யப்பட்டும் ஒரு நாள் தாமதமானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது படம் வெற்றிகரமாக வெளியாகி அந்த ஏமாற்றத்தை உற்சாகமாக மாற்றியுள்ளது.

திரிஷா என்ட்ரி
இந்த படத்தை முன்னிட்டு நடிகை திரிஷா சென்னை ரோகினி திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அவர் தியேட்டருக்கு வந்தவுடன் ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்று, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திரிஷாவும் ரசிகர்களின் உற்சாகத்தை ரசித்து, அவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது அந்த தருணத்தை சிறப்பாக்கியது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சந்தோஷத்தில் ஆர்ஜே பாலாஜி
அதுபோல, படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியும் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் கைத்தட்டியும், உற்சாகக் குரல்களாலும் வரவேற்றனர். படம் தாமதமானதால் ஏற்பட்ட மன அழுத்தத்தை ரசிகர்களின் இந்த ஆதரவு குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கலங்கிய ஆர்.ஜே பாலாஜி
நேற்று மே 14ஆம் தேதி இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான முன்பதிவுகளும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் படம் சொன்ன தேதியில் நேற்று வெளியிட முடியவில்லை. இதனால் கண்கலங்கி அழுதபடியே ஆர் ஜே பாலாஜி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் இன்று தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனதும் சந்தோஷமாக ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

கருப்பு படம் சிறப்பு
"கருப்பு" திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் சூர்யா, திரிஷா, நட்டி, யோகி பாபு, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படம், திரில்லர் அம்சங்களுடன் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டதாக கூறப்படுகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து "திரையரங்குகளில் சந்திப்போம்" என பதிவிட்டார். அதேபோல் திரிஷாவும் படம் இன்று வெளியாகிறது என்பதை உற்சாகமாக பகிர்ந்திருந்தார். இந்த பதிவுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தன.

ரசிகர்கள் கருத்து
தற்போது படம் வெளியான நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பதிவு செய்து வருகின்றனர். "இத்தனை நாள் காத்திருந்தது வீணாகவில்லை", "சூர்யாவின் கேரக்டர் புதுசா இருக்கு", "திரில்லர் சீன்கள் நன்றாக வேலை செய்கிறது" போன்ற கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், பல பிரச்சனைகளுக்கு பின் வெளிவந்த "கருப்பு" படம், முதல் நாளிலேயே ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இப்போது இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு சாதிக்கும் என்பது தான் அடுத்த பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications