நடிகை ராதிகாவை கட்டியணைத்து கதறி அழுத தங்கச்சி நிரோஷா… தியேட்டர் வாசலில் நடந்த சம்பவம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையுலகில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. படத்துக்குக் கிடைத்த பாராட்டுகள் மட்டுமல்லாமல், வெளியே நடந்த உணர்ச்சி பூர்வமான தருணங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நடிகை ராதிகாவை கட்டியணைத்து நடிகை நிரோஷா கதறி அழுத காட்சி ரசிகர்களை ஆழமாக நெகிழ வைத்துள்ளது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளதாக திரையுலகினர் ஒரே குரலில் பாராட்டி வருகின்றனர். படம் முடிந்து வெளியே வந்த நிரோஷா, கண்கலங்கியபடி நேராக ராதிகாவை அணைத்துக்கொண்டு அழுதார். அந்த தருணம் அங்கு இருந்தவர்களை மட்டுமல்லாமல், பின்னர் வெளியான வீடியோவின் மூலம் ரசிகர்களையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

நடிகை நிரோஷா உருக்கம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிரோஷா, நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வளவு மனதை தொடும் ஒரு நல்ல படத்தை பார்த்ததாக கூறினார். "சில இடங்களில் சிரித்தேன், சில இடங்களில் அழுதேன். இந்தப் படத்தில் என் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க முடிந்தது. அவர்கள் மறைந்த பிறகு, அவர்களின் உருவமாக என் அக்காவை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை" என்று கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி
சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் இளம் தலைமுறையிலும் பிரபலமான நிரோஷா, தற்போது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சொந்த அக்கா நடித்த படத்தை பற்றி இவ்வளவு பெருமையாகவும் உணர்ச்சியுடனும் பேசிய அவரது வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
செண்டிமெண்ட் காட்சி
ஏற்கனவே இந்தப் பிரீமியரில் நடிகர் பால சரவணன் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து அழுத தருணம், டிடி அவரை "என் முன்னாடியே வளர்ந்த தம்பி" என்று வாழ்த்திய காட்சி, ராதிகா கண்கலங்கியபடி சிவகார்த்திகேயனை தேடி நன்றி கூறிய சம்பவம் ஆகியவை வைரலான நிலையில், தற்போது நிரோஷாவின் இந்த அக்கா-தங்கை பாச தருணம் தாய் கிழவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
பிரீமியர் காட்சியிலேயே இவ்வளவு எமோஷனல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால், படம் பொதுமக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ராதிகாவின் நடிப்பு, குடும்ப உணர்வுகளை தூண்டும் கதை, சிவகார்த்திகேயனின் தயாரிப்பு - இந்த மூன்றின் இணைப்பால் தாய் கிழவி வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications