Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூய்மை பணியாளருக்கு தங்க செயின்! இப்போ ரஜினி வள்ளலா? சீருடையில் தான் வர வைப்பீங்களா? இயக்குநர் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : (Rajinikanth Honors Sanitation Worker Padma) குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை அதன் உரிமையாளரிடம் காவல்துறை உதவியுடன் ஒப்படைத்த நேர்மைக்காக, சென்னை தி.நகர் பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் பத்மாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 3) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு பத்மாவை நேரில் வரவழைத்து, தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டினார்.

ரஜினியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றதோடு, ஒரு சாமானிய தொழிலாளியின் நேர்மையை நேரில் அழைத்து கௌரவித்த செயல் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த விஷயத்தை வைத்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Rajinikanth Padma Sanitation Worker

லெனின் பாரதியின் விமர்சனம்

'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ரஜினிகாந்தின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து வெளியிட்டார். அதில், "தூய்மை பணியாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக் கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே...? உங்கள் பெருந்தன்மை வெங்காயத்தை காட்ட அவர்களை சீருடையோடு தான் அடையாளப்படுத்துவீர்களா? போலி கொடை வள்ளல்களே..! என்று விமர்சித்து இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து

இயக்குனர் லெனின் பாரதியின் இந்த பதிவு வெளியானதும், இணையத்தில் இந்த விஷயம் குறித்த விவாதம் தீவிரமானது. ஒரு தரப்பு மக்கள், ஒரு நல்ல செயலை பாராட்டுவது தவறு இல்லை. ஆனால் துப்புரவு தொழிலாளர்கள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகள், வேலை பாதுகாப்பு, சம்பளம், சமூக அங்கீகாரம் போன்ற விஷயங்களில் பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

இப்படி ஒருசில நேரங்களில் மட்டும் கவனம் செலுத்துவது, சமூக பிரச்சினைகளின் ஆழத்தை மறைக்குமா என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

ரஜினிக்கு ஆதரவான கருத்துகள்

மற்றொரு தரப்பு மக்கள், ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் நிலையில், இது ஒரு மனிதரின் நேர்மையை பாராட்டிய தனிப்பட்ட செயல் மட்டுமே என்று கூறுகின்றனர். மேலும், பத்மா முதலமைச்சரை சந்திக்க சென்றபோதும், நகை உரிமையாளரை சந்திக்க சென்றபோதும் சீருடை அணிந்து தான் சென்றதாகவும், அது அவருடைய சொந்த விருப்பம் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். இதில் அவமதிப்பு என்ற நோக்கம் இல்லை என சிலர் விளக்கம் தருகிறார்கள்.

சீனு ராமசாமி மற்றும் பார்த்திபனின் பாராட்டு

இந்த விவகாரத்தில் இயக்குநர் சீனு ராமசாமி, துப்புரவு பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்த ரஜினிகாந்தை பாராட்டி பதிவு செய்துள்ளார். ஒரு சாமானிய மனிதனின் நேர்மையை கொண்டாடிய செயல் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பத்மாவிற்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தியதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், பல்வேறு தரப்பினரும் பத்மாவின் நேர்மையை முன்னிலைப்படுத்தி பாராட்டி வருவது தெளிவாகிறது.

இந்த சம்பவம், ஒரு பக்கம் தனிநபரின் நேர்மையை சமூகமே சேர்ந்து கொண்டாடும் அழகான தருணமாகவும், மற்றொரு பக்கம் துப்புரவு தொழிலாளர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய அவசியத்தையும் நினைவுபடுத்தும் விவாதமாகவும் மாறியுள்ளது.

எது எப்படி இருந்தாலும், கீழே கிடந்த நகைக்காக ஆசைப்படாமல் 45 சவரன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த பத்மாவின் செயல் தான் இந்த நிகழ்வின் மையம். அந்த நேர்மை இன்னும் பலருக்கு ஒரு முன்னுதாரணமாக மாறினால், அதுவே இந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+