சார் முதலமைச்சர் விஜய்.. ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்! அடுத்த பஞ்சாயத்து! கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நடிகரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றது, தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நேரடியாக அரசியலுக்குள் வந்து முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ள இந்த மாற்றம், அரசியல் வரலாற்றில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விஜய் அரசியல்
பதவியேற்ற மறுநாளே, அரசியல் நாகரீகத்தை முன்னிறுத்தும் வகையில் விஜய் பல முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தார். முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து வைகோ மற்றும் சீமான் ஆகியோர்களையும் சந்தித்து அரசியல் குறித்து கலந்துரையாடினார். கடந்த தேர்தல் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் பரிமாறிக் கொண்டிருந்த நிலையிலும், இந்த சந்திப்புகள் "நாகரீக அரசியல்" என்ற கோணத்தில் பாராட்டப்பட்டதோடு, புதிய அரசியல் சமநிலையை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.
முதல்வர் விஜய் செயல்பாடு
முதல்வராக பொறுப்பேற்றதும், விஜய் எடுத்த சில ஆரம்ப நடவடிக்கைகளும் கவனத்தை பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, சமூக நலனை முன்னிலைப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. இதற்காக நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பதவியேற்ற பிறகு, அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஒற்றுமை அரசியலை முன்னெடுக்க முயற்சித்ததும் அரசியல் வட்டாரங்களில் முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், எதிர்க்கட்சிகளுடனும் இணக்கமான அணுகுமுறையை கையாள விரும்புகிறார் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த சூழலில், தமிழ் சினிமாவின் மற்றொரு மிகப்பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்த்தை விஜய் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. சினிமாவில் இரு பெரிய நட்சத்திரங்களாக கருதப்படும் இவர்களுக்கிடையேயான உறவு குறித்து எப்போதும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் மற்றும் சினிமா ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் இதுவரை சி. ஜோசப் விஜய், ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரஜினிகாந்தின் ரியாக்ஷன்
நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த்திடம், "விஜய் முதலமைச்சராக பதவியேற்றது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த நேரடி பதிலும் அளிக்காமல், கையெடுத்து கும்பிட்டு புன்னகைத்தபடியே அங்கிருந்து சென்றார்.
அவர் கருத்து தெரிவிக்காமல் சென்றாலும், அவரது அந்த அமைதியான புன்னகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் அதை மரியாதையான வாழ்த்தாக எடுத்துக் கொள்ள, மற்றொரு தரப்பு "ஏன் ரஜினி கருத்து சொல்லவில்லை?" என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
எதிர்பார்ப்பு தொடர்கிறது
இந்த சூழலில், விஜய் - ரஜினிகாந்த் நேரடி சந்திப்பு நடைபெறுமா? அது அரசியல் ரீதியாக புதிய மாற்றத்தை உருவாக்குமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து எழுகின்றன.












Click it and Unblock the Notifications