Janaki : மகன் இறப்பால் தவிக்கும் பாடகி ஜானகி.. அவர் பேத்தி வெளியிட்ட உருக்கமான அறிக்கை!
சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி. அவரது குரல் பல தலைமுறைகளின் நினைவுகளோடு கலந்த ஒன்று. அந்த ஜானகியின் குடும்பத்தில் இப்போது ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அவர்களின் புதல்வனான ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா, நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை மைசூரில் காலமானார். அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஜானகியை நேசிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு துணையாக இருந்த மகன்
முரளி கிருஷ்ணா, தனது அம்மா ஜானகிக்கு வாழ்க்கை முழுவதும் பக்கபலமாக இருந்து வந்தவர். தாயின் இசை பயணத்தில், மேடை நிகழ்ச்சிகள் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அனைத்திலும் துணையாக நின்றவர் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது தாயின் வழியில், அவர் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதி நாட்கள் குடும்பத்தினரும் நலம் விரும்பிகளும் சூழ்ந்திருக்க, அமைதியாக கழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன.
ஜானகி பேத்தி அப்சரா வேண்டுகோள்
இந்த நிலையில், ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கையில், தனது தந்தையின் மறைவை பற்றி மிகுந்த வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனது தந்தையின் மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, எங்களுக்கு சிறிது தனிமை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்," என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடகி எஸ். ஜானகியின் உடல்நிலை குறித்து பரவிவரும் சில தேவையற்ற வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். "எஸ். ஜானகி நலமுடன் இருக்கிறார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கிறார். குடும்ப வட்டத்திற்கு வெளியே சிலர் பரப்பும் தவறான தகவல்கள் உண்மையல்ல. இத்தகைய சரிபார்க்கப்படாத செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.
ரசிகர்களின் பிரார்த்தனையும் அன்பும்
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் திகழ்ந்த எஸ். ஜானகி, தனது குரலால் லட்சக்கணக்கான பாடல்களை உயிர்ப்பித்தவர். அவரது பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கலைஞரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த குடும்ப சோகம், ரசிகர்களையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் ஜானகிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தங்களின் அன்பும் பிரார்த்தனையும் அவர்களுடன் இருப்பதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications