ரிலீஸ் ஆகாத படத்துக்கே 3 மாநில அவார்டா? தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலில் வெடித்த புதிய சர்ச்சை
சென்னை: தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான மாநில விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூகப் பொறுப்பு, மனித நல்லுணர்வு, சமத்துவம் போன்ற கருத்துகளை முன்னிறுத்தும் படங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
இந்த விருது பட்டியலில், சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி போன்ற சமூகப் பின்னணியுள்ள படங்கள் இடம் பெற்றுள்ளன.

ரிலீஸ் ஆகாத படத்திற்கு விருது
இந்த நிலையில், விருது பட்டியலில் இடம்பெற்ற ஒரு விஷயம் தான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டைக்காரி' திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் இதுவரை திரைக்கு வராமலேயே உள்ளது.
திரைக்கு வராத, பொதுமக்கள் பார்க்காத ஒரு படத்திற்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்படுவது எப்படி? என்ற கேள்வி தான் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக எழுந்து வருகிறது. "வெளியாகாத படத்தின் தரத்தை எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்தார்கள்?", "திரையரங்குகளில் வெளியாகாத படங்களை விருதுக்கு பரிந்துரைக்கலாம் என்ற விதிமுறை உள்ளதா?", "மற்ற வெளியான படங்களுக்கு இது அநியாயமா இல்லையா?" போன்ற கேள்விகள் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விருது தேர்வு நடைமுறை மீதான சந்தேகம்
மாநில திரைப்பட விருதுகளுக்கான தேர்வு குழு, சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு, அரசின் விதிமுறைகளின் படி பதிவு செய்யப்பட்ட படங்களை பரிசீலித்து விருதுகள் அறிவிப்பதாக அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், சென்சார் முடிந்து, தொழில்நுட்ப ரீதியாக 'தயாராக உள்ள' படங்களையும் விருதுக்காக பரிசீலிக்க முடியும் என்ற விதி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பொதுவாக வெளியான படங்களுக்கே விருது வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், திரைக்கு வராத படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது, தேர்வு குழுவின் செயல்முறை மீது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
சமூக வலைதள விமர்சனம்
இந்த விவகாரம் வெளியில் வந்ததும், சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகவும், விருது தேர்வு குழுவுக்கு எதிராகவும் விமர்சனங்கள் குவிந்துள்ளன. "விருதுகள் உண்மையிலேயே தரத்திற்காக தானா? இல்லையா சிலர் செல்வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்களா?" "வெளியாவதற்கே போராடும் படத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கிறது என்றால், ஏற்கனவே வெளியான சிறிய படங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறதா?" என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசின் விருதுகள்
தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில திரைப்பட விருதுகள், கலைஞர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. குறிப்பாக சமூக சிந்தனைகளை பேசும் படங்களுக்கு அரசு விருது வழங்குவது, திரையுலகில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்படி சர்ச்சைகள் தொடர்ந்து எழும்போது, விருதுகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் இயல்பாகவே உருவாகிறது.
விழாவுக்கு முன்பே சூடுபிடிக்கும் விவகாரம்
பிப்ரவரி 13ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பே இந்த "ரிலீஸ் ஆகாத படத்திற்கு மூன்று விருதுகள்" விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் அல்லது தேர்வு குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா? அல்லது இந்த சர்ச்சை விருது விழா நாள்வரை நீடிக்குமா? என்ற கேள்விகளுடன், திரையுலகமும் ரசிகர்களும் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications