''டாலர்களை சந்தையில் கொட்டவா?!!''- பாகம் 2

(''டாலர்களை சந்தையில் கொட்டவா?!!'' கட்டுரையின் தொடர்ச்சி)
நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்தக் கடன் அளவை அமெரிக்கா வெகு விரைவிலேயே எட்டி விடலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதனால், நினைப்பதை விட மிக விரைவிலேயே மீண்டும் இந்த கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படலாம்.
அப்படி ஒரு நிலை வந்தால் டாலரின் மதிப்பு வெகுவாகவே சரியும். அப்படிச் சரிந்தால், முதல் அடி அமெரிக்காவுக்கு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான அளவில் டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் சீனாவுக்குத் தான் பிற நாடுகளை விட பெரும் அடி விழலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
இதனால் இப்போது சீனாவிடம் பிரம்மாஸ்திரமாக இருக்கும் டாலர்களே அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கலாம். சீனாவின் ரிசர்வ் வங்கியான People's Bank of China தான் இந்த 3.8 டிரில்லியன் டாலர்களை கையிருப்பில் வைத்துள்ளது. இந்த வங்கிக்கு அடி விழுந்தால், சீனாவின் அனைத்து மட்டங்களிலும் அதன் பாதிப்பு படு வேகத்தில் பரவும்.
இதனால் இவ்வளவு டாலர்களை சீனா கையில் வைத்திருக்கும் வரை, அமெரிக்காவுக்கு எப்போதெல்லாம் பொருளாதார சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் சீனாவுக்கு சிக்கல் தான்.
இதை உணர்ந்துள்ள சீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக டாலர்களைக் 'கரைத்துவிட்டு' அதை வேறு நாட்டு கரன்சிகளாகவும் (யுரோ), தங்கமாகவும் மாற்றலாமா என்ற யோசனையில் உள்ளது.
அதே போல டாலருக்கு எதிரான தனது நாட்டு கரன்சியான யுவானின் (yuan) மதிப்பை அதிகரிப்பது குறித்தும் சீனா யோசித்து வருகிறது. இதுவரை அமெரிக்காவே எத்தனையோ முறை கோரியும் கூட சீனா தனது கரன்சியின் மதிப்பை அதிகரிக்கவே விட்டதில்லை. இதன்மூலம் டாலரின் மதிப்பை மிக அதிகமாகவே வைத்திருந்து, சீன மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதை கஷ்டமான ஒரு விஷயமாகவே வைத்துள்ளது.
இ்ப்போது தனது கரன்சியான யுவானின் மதிப்பை அதிகரித்துவிட்டால், டாலருக்குப் பதில் வேறு நாட்டுக் கரன்சிகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் சீன ரிசர்வ் வங்கிக்கு இல்லை. உயர்த்தப்பட்ட யுவானின் மதிப்பே, டாலரின் மதிப்பு சரிவதால் ஏற்படும் இழப்பை சரி செய்துவிடும்.
ஆனால், சீன கரன்சியின் மதிப்பு உயர்ந்தால் அதை வாங்க உலக நாடுகளிடையே, சர்வதேச முதலீட்டாளர்களிடையே திடீரென போட்டி உருவாகும். சீனா எப்படி அமெரிக்க டாலர்களை வாங்கி குவித்து வைத்துள்ளதோ, அதே போல பிற நாடுகள் யுவானை வாங்கி குவிக்க முயலாலாம். இதனால் அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆனால், அளவுக்கு மீறி யுவானின் மதிப்பு அதிகரித்தால், அது சீனாவின் ஏற்றுமதியை பாதிக்கும்.
சீனாவைப் பொறுத்தவரை அதன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதி தான். சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 40 சதவீதம் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது (அதிலும் பெருமளவிலான ஏற்றுமதி நடப்பது அமெரிக்காவுக்குத் தான்). ஏற்றுமதி குறைந்தால், சீன பொருளாதார வளர்ச்சி 3 முதல் 5 சதவீதம் சரியும் என்கிறார்கள். மேலும் ஏற்றுமதி குறைந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஏற்படும்.
சீனாவின் Center for Economic Research நடத்தியுள்ள ஒரு ஆய்வின்படி, டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு 20 சதவீதம் அதிகரித்தால்.. (நான் மேலே 2 பாராக்களில் சொன்ன விஷயங்கள் நடந்து) நாட்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் காலியாகும் என்று தெரியவந்துள்ளது.
இதனால் சீனாவின் கையில் உள்ள இந்த 3.8 டிரில்லியன் டாலர் என்பது.. சாதாரண சுமை அல்ல.. பெரும் சுமை!
(தொடரும்)
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)












Click it and Unblock the Notifications