'கேசினோக்கள்' மூலம் இந்தியாவுக்குள் வரும் தீவிரவாத பணம்!
டாலக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு (casinos) வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சூதாட்ட தலைநகரம் என்றால் அது கோவா தான். இங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் பல சாதாரண ஹோட்டல்களிலும் ஏராளமான கேசினாக்கள் உள்ளன. மேலும் கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதற்கெனவே மிதக்கும் கேசினோக்களும் இயங்குகின்றன.
இதைத் தவிர சிக்கிம் மாநிலத்திலும் ஏரளமான கேசினோக்கள் உள்ளன. கோவா, சிக்கிமில் தான் சூதாட்ட விடுதிகளை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகாவ் பகுதி தான் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் போனது. அடுத்த இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.
ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால், இந்த நாடுகளை விட இந்தியாவில் சூதாடுவது 'சீப்' ஆகிவிட்டது. இதனால், கோவா மற்றும் சிக்கிமை நோக்கி வரும் வெளிநாட்டு சூதாட்டப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
ஆனால், இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் பணத்தை கண்காணித்து வரும் மத்திய அரசின் நிதித்துறையின் உளவு அமைப்பான Financial Intelligence Unit (FIU), சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புகளும், இந்த கேசினோக்கள் மூலமாக நாட்டுக்குள் பணம் அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஓராண்டில் கேசினோக்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு பணத்தில் 7,006 பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை (Suspicious Transactions) என எப்ஐயு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதலே இந்திய கேசினோக்கள் அன்னிய செலவாணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீன் கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க Financial Action Task Force என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் இந்திய உளவுப் பிரிவுகளும் நிதித்துறை உளவு அமைப்பும் இணைந்து இந்தியாவுக்குள் வரும் அன்னிய செலவாணியை கண்காணித்து வருகின்றன.
இந்த அமைப்புகள் கடந்த ஓராண்டில் மட்டும் 7,006 சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிமாற்றங்களை கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மேலும் கண்காணிக்க வசதியாக, இது தொடர்பாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.