ரஜினி கண்கலங்க வைத்த நிமிடங்கள்....!!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூருடனான சந்திப்பின் தொடர்ச்சி...

சூப்பர் ஸ்டார் ஆன பிறகு ரஜினிடம் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?
அது தான் எனக்கே ஆச்சரியம். அப்போது கண்டக்டராக எப்படி என்னிடம் பழகினாரோ அப்படியே தான் இன்றும் இருக்கிறார். திடீரென பெங்களூர் வந்து என் வீட்டில் வந்து நிற்பார். பக்கத்தில் உள்ள சின்ன ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார். கையோடு கொண்டு வரும் மேக்-அப் கிட்டை வைத்து அவரே ஏதாவது ஒரு வேடம் போட்டுக் கொள்வார். வாடா, ஊரை சுத்தலாம் என்று ஆட்டோவிலோ, டிவிஎஸ்-50யிலோ அல்லது பஸ்சிலோ ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்புவார்.

பழைய நினைவுகளில் மூழ்கியபடி...
நாங்கள் ஆரம்பத்தில் சுற்றித் திரிந்த காந்தி நகர், சாம்ராஜ் பேட், ராஜாஜி நகர் பக்கமாக சுத்துவோம். அவருக்கு தனது வாழ்க்கையின் பழைய பக்கங்கள் மிகவும் பிடிக்கும். சிறிய வயதில் திரிந்த அதே சாலைகளில், பகுதிகளில் பழைய நினைவுகளில் மூழ்கியபடி, அதைப் பற்றி என்னுடன் பேசியபடி நடந்தே சுற்றுவார்.

அவர் ஒரு வித்தியாசமான மனிதருங்க....
நீ பெரிய ஆள், நீ எங்கே இருக்கேன்னு சொல்லு.. நான் வர்றேன் என்றால் விட மாட்டார் ரஜினி. ஆரம்ப காலங்களில் நான் தான் உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்திருக்கேன். இப்பவும் நானே தான் வருவேன். நீ அலையக்கூடாது என்பார். அவர் ஒரு வித்தியாசமான மனிதருங்க.

கண்கலங்க வைத்த நிமிடங்கள்....
சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க அவரது யாரையும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. பெரிய பெரிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் அவரைப் பார்க்க அனுமதி கேட்டும் யாரையும் அனுமதிக்கவில்லை.

நான் கண்ணீர் விட்டதைப் பார்த்து...
நான் கலங்கிப் போய் சென்னைக்கு ஓடினேன். மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியு வார்டு முன் நின்றிருந்த லதா ரஜினிகாந்த் மற்றும் குழந்தைகளிடம் நான் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்றேன். யாரையும் டாக்டர்கள் அனுமதிக்க மாட்டாங்க என்று லதா கூறினார். ஆனால், நான் கலங்கிப் போய் கண்ணீர் விட்டதைப் பார்த்து டாக்டர்களிடம் எனக்காகப் பேசினார் லதா.

டாக்டருக்கு வந்த சந்தேகம்....
யாருக்கும் தர முடியாத அனுமதியை எனக்கு வாங்கித் தர லதா பிரயத்தனப்படுவதைப் பார்த்த டாக்டருக்கு பெரிய சந்தேகம். யார் இவன், அவ்வளவு பெரிய ஆளா என்ற சந்தேகத்தோடு என்னைப் பார்த்தவர், நான் ரஜினியின் நண்பன் என்றவுடன் தூரத்தில் நின்று பார்க்க அனுமதித்தார். அந்த டாக்டரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. நட்பின் ஆழம் அவருக்குப் புரிந்ததை உணர வைத்தது அவரது பார்வை.
(ரஜினி அரசியல் பிரவேசம் செய்வாரா?.. தொடரும்)












Click it and Unblock the Notifications