ரஜினி அரசியலுக்கு வருவாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூருடனான சந்திப்பின் கடைசி பாகம்...
(ரஜினி கண்கலங்க வைத்த நிமிடங்கள்....!!)
(20 நாட்களில் தமிழ் கற்ற ரஜினி... 'நண்பேன்டா' ராஜ் பகதூர்)
(ரஜினியின் 'நண்பேன்டா' ராஜ் பகதூருடன் ஒரு சந்திப்பு!)
ரஜினியிடம் உங்களுக்குப் பிடித்தது...?
ரஜினிக்கு உண்மை பேசுறது ரொம்ப பிடிக்கும். பொய் பேசக் கூடாது. ரஜினிடம் எனக்குப் பிடித்தது இது தான். நண்பர்களுக்கு தான் ரஜினிடம் முதலிடம். உறவினர்களை விட நண்பர்களுக்கும் நட்புக்கும் தான் அதிக முக்கியத்துவம் தருவார்.
பழசை மறக்கவே மாட்டார்....
பழசை மறக்கவே மாட்டார். அதிலும் குறிப்பாக கஷ்டப்பட்ட காலங்களை. நான் இப்போ போட்டிருக்கும் செயின், மோதிரம் எல்லாம் அவர் போட்டது தான். அவர் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்கப் போன போது அவருக்கு பணக் கஷடம் வரும். அப்போது என் செயினை அவரிடம் கொடுத்தேன். உனக்கு கஷ்டம் வரும்போது இதை அடகு வச்சு பணம் எடுத்துக்கோ. நான் பணம் அனுப்பினதும் மீட்டுக்கோ என்று கூறியிருந்தேன். அதே போல அதை பலமுறை சேட்டுகிட்ட வச்சு பணம் வாங்கியிருக்கிறார். இதை லதா அவர்களிடம் ரஜினி சொல்லியிருக்கிறார்.
ரஜினி போட்ட செயின்-மோதிரம்:
சமீபத்தில் ரஜினி வீட்டில் நடந்த ஒரு விஷேசத்தில் பெரிய பெரிய முக்கிய பிரபலங்கள் இருந்த நிலையில், என்னை அழைத்த லதா, நீங்க அவருக்கு கஷ்ட காலத்துல செயின் கொடுத்து உதவி செஞ்சீங்கன்னு அடிக்கடி சொல்வார். இப்போ அவர் சார்பா நான் இந்த செயினை தர்றேன்னு சொல்லி எனக்குத் தந்தாங்க. மோதிரமும் போட்டுவிட்டாங்க. இதை நான் கழற்றவே கூடாதுங்கறது ரஜினியோடு ஆர்டர். நான் செத்தா கூட இந்த செயின், மோதிரம் இரண்டும் உன் பாடியிலேயே இருக்கணும்னு, அதை நான் எடுத்து போட்டுக்குவேன்னு வேற ரஜினி சொல்லிட்டான். இதனால் இது இரண்டையும் நான் கழற்றதே இல்லை.
ரஜினிக்கு ரொம்ப பிடிச்ச இடம்?
பெங்களூர் தான். நினைச்சா பிளைட் ஏறி வந்துருவார். வந்து இறங்கிட்டுத் தான், டேய் நான் வந்துட்டேன் என்பார். அவரே நேரா என் வீட்டுக்கு வந்துருவார். எப்போ வருவார் என்றே சொல்ல முடியாது. தியேட்டர்களுக்குப் போய் நிறைய சினிமா பார்ப்பார். தர்மஸ்தலா, திருப்பதின்னு கூட்டிக்குக் கிளம்புவார்.
சின்ன ஹோட்டல்களில் சாப்பிடுவார்....
போற வழியில சின்ன ஹோட்டல்கள்ல வண்டிய நிறுத்தச் சொல்லி சாப்பிடுவார். நாங்கள் நாலே பேர் இருந்தாலும் 25, 30 பார்சல் வாங்கச் சொல்வார். வழியெல்லாம் ஏழைகளுக்கு அதை கொடுத்துக்கிடே போவார். அதே போல ஏராளமான ஏழைகளுக்கு வெளியிலேயே தெரியாமல் கோடிக்கணக்கில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். எதுவுமே வெளியில் தெரியக் கூடாது என்பதில் மிக மிக கண்டிப்பாக இருப்பார்.
அரசியலுக்கு வருவாரா.. மாட்டாரா?
அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருப்பவன் நான். அரசியலுக்கு வந்தால் எதிர்க் கட்சிக்காரன் திட்டுவான். சொந்தக் கட்சியிலேயே ஒருவனுக்கு கை கொடுத்தால், அடுத்தவன் திட்டுவான். அரசியலில் ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அடுத்தவருக்கு கெடுதல் செய்தாக வேண்டும். அது தான் அரசியல். ரஜினிக்கு கெடுதல் செய்யத் தெரியாது, வராது. இதனால் ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றார் ராஜ் பகதூர்.