அடுத்த சில வினாடிகளில் கடும் இருள் சூழ.. மயானமானது ஹிரோஷிமா
8.15 மணி
எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்... சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய... இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை.

அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி. அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள்.
கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம். கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள். இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே.

இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.












Click it and Unblock the Notifications