அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும்... சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள்
காலை 7.30 மணி.
ஹிரோஷிமாவில் விழும் வழக்கமான அமெரிக்க போர் விமான குண்டுகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தடுப்புகளை உருவாக்கும் வேலையில் ஜப்பானிய குழந்தைகளும் ஈடுபடுவது வழக்கம். பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கம்போல இந்தப் பணியில் பங்கேற்க 12 வயதான சுமார் 8,000 பிஞ்சுகள் ஹிரோஷிமாவின் மையப் பகுதியில் உள்ள Aioi Bridge பாலம் அருகே கூடுகின்றனர்.
7.50 மணி
எல்லோரும் தயாராகுங்கள். அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும். இதனால் அந்த சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒளி அடங்கும் வரை யாரும் அதைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சிலிருந்து தப்ப உதவும் உடைகளையும் அணியுங்கள் என உத்தரவிடுகிறார் பைலட் டிபிட்ஸ்.
8.12
ஜெர்மனியில் 60 முறை விமானம் மூலம் குண்டுகளை வீசி அனுபவம் வாய்ந்த மேஜர் தாமஸ் ப்ரீபீ தான் லிட்டில் பாய் குண்டை ஹிரோஷிமா மீது போட வேண்டும். தனது டார்கெட்டான Aioi Bridge பாலத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்புகிறார். விமானம் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி என அறிவிக்கிறார் பைலட். அணுகுண்டை செயல்பட வைத்த தாமஸ் 3 நிமிடங்கள் 43 நொடி என டைமரை செட் செய்கிறார்.