Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஓபிசி, எஸ்சி,எஸ்டி மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய கல்வி உரிமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையான Gross Enrollment Ratioவில் தமிழகம்தான் முதலிடம்- அத்துடன் பல்வேறு உலக நாடுகளை ஒப்பிட்டாலும் கூட தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்கிறது இந்த புள்ளிவிவரம். தமிழகத்தில் கல்வி வளர்ச்சியின் போக்கை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆதி தமிழர்கள் காலம் முதல் தமிழ்நிலமானது கல்வியில் சிறந்ததாக திகழ்ந்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர் தமிழர்.

உலகிலேயே கடல் கடந்து அத்தனை தேசங்களிலும் வாணிபம் செய்தவர்கள் தமிழர்கள். பிற நாடுகளுடன் எப்படியான தொடர்புகளை பின்பற்ற வேண்டும்? அணுகவேண்டும் என்ற அறிவு ஞானம் கொண்ட மண்ணாக இது இருந்திருக்கிறது. ஆனால் தமிழர் வரலாற்றில் சங்க கால இலக்கியங்கள் எனும் பெரும் புதையலுக்குப் பின்னர் சுமார் 2,000 ஆண்டுகாலம் கல்வி சூழல் ஆகப் பெரும் முடக்கத்தை எதிர்கொண்டிருந்ததையும் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. பாமரனும் கல்வி பெற்றிருந்த தமிழ்நிலத்தில் 2,000 ஆண்டுகால தேக்க நிலை உருவானது. இதன்விளைவாக சங்க கால இலக்கியங்களைப் போல பெரும் எண்ணிக்கையிலான நூல்களை ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் நம்மால் பட்டியல் போட்டு காட்ட முடியாமல் போனது. இவை எல்லாம் கூட வரலாறுதான். நம் கண்ணால் காணாதவை. இவை ஒருபுறம் இருக்கட்டும்.

Education system and OBC,SC/ST Status in Tamilnadu

நம் காலத்தில் பாருங்கள்.. நம் தலைமுறையில் பெரும்பாலானோர் கல்வி கற்றிருப்பர். ஒரு கிராமத்தில் எழுதப் படிக்கவே தெரியாத இளைஞர்கள் இருக்கிறார்களா? எனில் நிச்சயம் ஒன்று அல்ல 2 பேர் என இருந்தாலே ஆச்சரியம். நமக்கு முந்தைய தலைமுறையில் கல்வி கற்றவர்களும் இருக்கிறார்கள்.. படிக்காதவர்களும் இருந்தார்கள். அதற்கு முந்தைய தாத்தா தலைமுறைகளில் யாரோ சிலர் படித்திருப்பார்கள். அப்படியாகத்தான் ஒரு சூழ்நிலை இருந்தது.

தமிழகத்தில் 1900களின் தொடக்கத்தில் கல்வி உரிமைக்காக, வேலை வாய்ப்பு உரிமைக்காகத்தான் திராவிடர் சங்கம், தென்னிய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய போது தமிழகத்தில் ஜாதியம்தான் கல்வி உள்ளிட்ட எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருந்தது. அப்போது செல்வந்தர்கள்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். தென்னிய நல உரிமைச் சங்கம் என்கிற நீதிக்கட்சியாகட்டும், தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமாகட்டும் இவற்றின் பிரதான நோக்கம் ஜாதி ஒழிப்பு என்பதுடன் மட்டுமல்லாது கல்வி, வேலைவாய்ப்பில் இந்த மண்ணின் மைந்தர்களுக்கும் சமமான உரிமை வேண்டும் என்பதுதான். இன்று கல்வியைப் பெற்றிருக்கும் நாம் அனைவரும் நமக்கு இந்த உரிமை கிடைத்த வரலாற்றையும் சற்று நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இன்று நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீட்டுக்கான மூலவேர் 100 ஆண்டுகளுக்கு முந்தையது. 1921-ம் ஆண்டு வகுப்புகள் அடிப்படையில்- அதாவது ஜாதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் “முதல் கம்யூனல் G.O 1921-ல் நீதிக்கட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. நம் தாத்தா தலைமுறையினர் பேசிய அரசியல் ஓட்டுக்கானது மட்டுமல்ல. நாட்டு விடுதலைக்கானது மட்டுமல்ல.. நமது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்கும் சேர்த்துதான் என்பதை இன்றைய இளந்தலைமுறை மறந்துவிடுகிறோம். ஆனால் அவர்கள் போட்ட விதையில் முளைத்த பெருமரங்கள் நாம் என்பதைத்தான் இன்றைய Gross Enrollment Ratio போன்ற புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி ஆணித்தரமாகச் சொல்கின்றன.

நம் முன்னோர்கள் நமக்காக நடத்திய அரசியலில் கிடைத்த வரங்களில் கல்வியும் ஒன்று. குறிப்பாக திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை நம் அப்பாக்கள், தாத்தாக்கள் வாழ்ந்த சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் படுபயங்கரமானது. அவற்றின் விளைவுகளால் அவர்கள் கல்வி கற்றார்கள், பிள்ளைகளை கல்வி கற்க வைத்தார்கள். எத்தனை கிலோ மீட்டர் தொலைவு ஆனாலும் அன்று நடந்து போய், சைக்கிளில் போய் படித்தார்கள். பழைய சோற்றை தூக்கு சட்டியில் சுமந்து கொண்டுபோய் படித்தார்கள். அன்று அரசு பள்ளிகள்தான். அந்த அரசு பள்ளிகளில் படித்துதான் அரசு பணியில் சேர்ந்தார்கள். இந்த தமிழ் சமூகத்துக்கான ஆசிரியர்களாக வாய்த்தவர்கள் வாழும் தெய்வங்களாகிப் போனார்கள். கல்வி என்ற அருமருந்தை பிள்ளைகளுக்கு தெவிட்டாத பேரின்பமாக ஊற்றி ஊற்றி வளர்த்தனர். தாத்தாக்கள் பெற்ற கல்வியால், அப்பாக்கள் பெரும்பாலானோர் பட்டதாரிகளானார். அரசு பணியாளர்களானார். தனியார் நிறுவனங்களில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள்.

எங்கள் கிராமத்தில் நாங்கள் வளருகிறபோது டாக்டர் தாத்தா மாதிரி படிக்கனும், நெய்வேலி மாமா (என்.எல்.சி.யில் பணிபுரிந்த பொறியாளர்) மாதிரி படிக்கனும் என்று ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள். இப்படி சமூகம் பேரெழுச்சியாக கல்வியை நோக்கி திரண்டு படையெடுத்து கொண்டிருந்த போது ஆட்சியில் அமர்ந்த அரசுகள் தங்கள் பங்குக்கு இந்த கல்விக்கான பங்களிப்பை செய்யாமல் இருந்தது இல்லை; அரசியல் கட்சிகளும் இந்த கல்விக்கு முட்டுக்கட்டையாக வந்தவற்றை எதிர்த்து போராடாமலும் இருந்தது இல்லை; இந்திய அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீட்டுக்காகத்தான் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டுக்கான திருத்தத்தை கொண்டுவரப் போராட்டங்கள் நடத்தியவர் தந்தை பெரியார் என்பதை நாம் அறிவோமா? இந்த போராட்டங்களைத்தான் நாம் அறிவோமா?

காமராஜர் மதிய உணவு திட்டத்தை மேம்படுத்தினார்; பக்தவச்சலம் அரசு இந்தியை கொண்டுவந்த போது மாணவர்கள் தங்களை தாங்களே சாகடித்துக் கொண்டு எதிர்ப்பு காட்டினர். அன்றைய இந்தி எதிர்ப்பு போராளிகள்தான் இன்றைய மூத்த முன்னோடி அரசியல்வாதிகள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொண்டு தங்களது கல்வியை தொலைத்த தந்தையர்கள் வாழும் நிலம் இது. இந்த தியாகம் எதற்காக? எதிர்கால சந்ததியினர் கல்வி உரிமையை ஆபத்தில்லாமல் கற்க வேண்டும் என்பதற்காக.. அன்று நமக்காக கல்வியை தொலைத்தார்கள்.. ஆனால் அவர்களது சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். பெண்ணடிமை கோலோச்சிய தமிழ்நிலத்தில் ஆண்களுக்கு இணையான பெண்களும் கல்வியில் கொடிகட்டிப் பறந்தனர். அரை நூற்றாண்டு கால திராவிடர் இயக்க ஆட்சி மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்கட்டும். ஆனால் கல்விக்கான கட்டமைப்பை, கல்வி கற்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் எளிமையாக்கினார்கள்.

கல்வி ஒரு சுமையாகிவிடக் கூடாது என்பது திராவிட கட்சிகளின் ஆட்சிகளின் ரத்தத்தில் தோய்ந்த ஒன்றாகிப் போனது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் இன்றைய எடப்பாடி அரசுகள் வரை எந்த ஒரு அரசும் இதில் சோடைபோனது இல்லை. சமூகத்தில் பெருங்கொடுமையாக ஜாதிய ஒடுக்குமுறை இன்னமும் இருக்கிறது.. ஒழிந்தபாடில்லைதான். ஆனால் ஜாதிய ஒடுக்குமுறையின் 100 ஆண்டுகாலப் போக்கை எடுத்துப் பாருங்கள்.. அடிப்படைகள் அத்தனையும் தகர்ந்து போயிருக்கும்.. சுரைக்காயன் என்ற சக்கிலியர் சமூகப் பெரியவருக்கு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்தில் சட்டியில் குடிதண்ணீர் ஊற்றி, பழைய சாதத்தைக் கொடுத்த காலம் இருந்தது... சுரைக்காயன் மகன் காலில் செருப்பு போடாமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு கிராமத்தில் நடந்த வரலாறு இருந்தது... இன்று அதே சுரைக்காயன் மகனும் பேரன்களும் அதே கிராமங்களில் சைக்கிளில், மோட்டார் சைக்கிளில் ஒய்யாரமாக பவனி வர முடிகிறது. இதை ஜீரணிக்க முடியாத ஜந்துகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் இல்லை.

தமிழ்நிலத்தில் ஒட்டுமொத்த வாழ்வியல் சூழ்நிலையையே அடியோடு மாற்றிவிட்டது 100 ஆண்டுகால கல்விப் புரட்சி. 2000 ஆண்டுகளாக எதன் எதன் பெயராலோ நாம் படிக்க முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். நமக்கான வாசலை பெரியோர்கள் திறந்துவிட்டார்கள்.. இன்று நாசாவும் நம் வசம் என்கிற உச்சநிலையை தொட்டு நிற்கிறோம்.

இந்தியாவின் பல மாநிலங்களில் தாய்மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள்தான் அதிகம். ஆனால் தமிழகத்தில் ஆகக் குறைந்தபட்சம் பெரும்பாலானோருக்கு தாய்மொழியுடன் ஆங்கிலம் அறிந்த மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் நான் பயணித்த போது அரசு அதிகாரி ஒருவருடன் உரையாடியபோது அவர் தமிழர்கள் ஆங்கிலத்திலும் பேசுவார்கள் என மிரட்சியுடன் கூறினார்.

குஜராத்தின் ஜூனாகத்தில் பெரிய ஹோட்டலில் தங்கி இருந்த போது மொழிபெயர்ப்பாளர் என்று எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு today- tomorrow என்பது கூட தெரியாமல் இருந்தது விந்தையாக இருந்தது. இப்படித்தான் பிற மாநிலங்கள் இருக்கின்றன.

உங்களுக்கு நம் முன்னத்தி ஏர்களான அரசியல் கட்சிகள், தலைவர்கள் மீது பட்டியல் போட்டு வாசித்து சொல்ல பல நூறு குறைகள் இருக்கலாம். ஆனால் அந்த முன்னத்தி ஏர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தம்முடன் நமக்கான கல்வி உரிமைக்கான தேரையும்தான் இழுத்தே வந்தார்கள்.. இப்போதும் இழுத்து வருகிறார்கள்.. அவர்களால்தான் நாம்.. அவர்கள் நமக்கு அளித்திருக்கும் கல்வி கொடைதான் இன்றைய தமிழ்நிலத்தின் ஆகப் பெரிய முன்னேற்ற முகம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு எப்படி இருக்கிறது என்கிற ஒரு சிறு புள்ளி விவரத்தைப் பார்த்தாலே தமிழகம் பெற்ற கல்வி அறிவு எப்படி இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை 1,18,57,504; பழங்குடி மக்கள் எண்ணிக்கை 6,51,321. இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு சதவிகிதம் என்பது மொத்தம் 62.8%. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு சதவிகிதம் என்பது மொத்தம் 66.6%

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஆண்களின் கல்வி அறிவு சதவிகிதம் 73%. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஆண்களின் கல்வி அறிவு சதவிகிதம் 75.6%. இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்.. புதிய பொருளாதாரக் கொள்கை வந்தபோது அமெரிக்காவில் பணிபுரிய இந்திய நிறுவனங்களுக்கு பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டு இளைஞர்கள் பல லட்சம் பேர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வியில் வெகுதொலைவு பயணித்தவர்கள்.. ஆகையால் அவர்களையே தேர்வு செய்தார்கள்.

ஒருகாலத்தில் சென்னைக்கு போவதையே இமயமலைக்கு செல்வதாக நினைத்த தமிழக கிராமத்தினர் இன்று அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நினைத்த நேரத்தில் பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை பார்க்க செல்கிறார்கள் எனில் இந்த மண்ணில் கல்வி எனும் கொடை கொடுத்திருக்கிற விளைச்சல் அப்படியானது என்பதை கற்ற நாம் அனைவரும் நிச்சயம் உணர்ந்தே ஆக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+