Fact check: கார் ரேஸுக்கு நிதி இருக்கு.. ரோடு போட காசு இல்லையா? அதிமுக பகிர்ந்த போட்டோ.. உண்மை என்ன?
சென்னை: "சிங்கார சென்னை?! கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு.. மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா?" என சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. கார் பந்தய வீரர்கள், போட்டிகளில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் சென்னையில் நடக்கிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட், சென்னை தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது.
பரவும் புகைப்படம்: இந்நிலையில், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, "கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு... மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு இந்த புகைப்படம் 4 வருடங்கள் பழையது, அதாவது, அதிமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன?: இந்த புகைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெருமழைக்கு பிறகு திருவொற்றியூர் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Fact Check
வெளியான செய்தி
சென்னையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருப்பது போல புகைப்படம் பரவி வருகிறது.
முடிவு
இந்த புகைப்படம் 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், இப்போதைய நிலைமை இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.











Click it and Unblock the Notifications