FACT CHECK: அண்ணாமலைதான் கருக்கா வினோத்தை குண்டு வீச சொன்னதாக ஊடகம் பெயரில் போலி கார்டு!
சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசி கைதான கருக்கா வினோத், கடந்த ஆண்டு கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலைதான் என வாக்குமூலம் கொடுத்ததாக வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே நேற்று மதியம் 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்த போலீசார் கையில் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
போலீஸ் விளக்கம்: இது தொடர்பாக காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இன்று (25.10.2023), மதியம் சுமார் 03.00 மணியளவில், சர்தார் படேல் சாலை வழியாக அடையாளம் தெரியாத ஒரு நபர் நடந்து வந்தார். இவர் நான்கு பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை கொண்டுவந்ததாகத் தெரிய வருகிறது. பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை அவர் ஆளுநர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது, பணியிலிருந்த பாதுகாப்பு போலீசாரால் அவர் தடுக்கப்பட்டார். அப்போது அவர் எறிய முற்பட்ட இரண்டு பாட்டில்களானது வெளிப்புற சாலையில் (சர்தார் படேல் சாலை) விழுந்தன.
பின்னர், அவர் பாதுகாப்பு போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையைச் சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேற்படி செயலில் ஈடுபட்ட நபர் நந்தனம் SM நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் எனவும், இவர் மீது E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 'C வகை சரித்திரப் போக்கிரிப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதும், முன்பு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 10.02.2022 அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.
என்பதும், மேற்சொன்ன அனைத்து வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு. நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இவர் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். மேற்படி செயல் தொடர்பாக, இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி இடத்தில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், மேற்படி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசியது தடுக்கப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்கம்: இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்." என்று குறிப்பிட்டு இருந்தது.
அதே பக்கத்தில் இன்று மதியம் மீண்டும் ஒரு தகவலை ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ளது. அதில், "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. வசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அண்ணாமலை பற்றி வதந்தி: இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த தாக்குதலில் ஈடுபட்டு கைதான ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசியவர் என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலைதான் என கருக்கா வினோத் போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்ததாக ஒரு தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டதைபோல் படம் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கமலாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அந்த படம் அதிகளவில் பகிரப்பட்டது. ஆனால், அதுபோல் கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறை தகவலே வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட ஊடகமும் அதுபோல் செய்தி வெளியிடவில்லை என மறுப்பு தெரிவித்தது. எனவே போட்டோசாப் செய்து பகிரப்பட்ட படம் என அப்போதே உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தை சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளார்கள்.

Fact Check
வெளியான செய்தி
கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச சொன்னதே அண்ணாமலைதான் என கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்ததாக நியூஸ் கார்டு
முடிவு
அதுபோல் எந்த செய்தியும் வெளியிடவில்லை என தனியார் ஊடகம் மறுப்பு வெளியிட்டது.












Click it and Unblock the Notifications