Fact Check: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. பேருந்து சேவை நிறுத்தமா? உண்மை என்ன?
சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அந்தச் செய்தி பழையது. தற்போது பேருந்து சேவை நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக, சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த இரு நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை (26.11.2024) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (27.11.2024) ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பேருந்து சேவை நிறுத்தம் என சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “நாளை மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்தச் செய்தி பழையது எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், அந்த நியூஸ் கார்டு பழையது என்றும், தற்போது டெல்டா மழை எச்சரிக்கையை முன்னிட்டு பரப்பப்பட் டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும், பேருந்து சேவை நிறுத்தம் என்பது உண்மை அல்ல.

Fact Check
வெளியான செய்தி
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மதியம் 1 மணி முதல், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக செய்தி பரவியது.
முடிவு
இந்தச் செய்தி பழையது. தற்போது இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications