Fact Check: வெயில் காலத்தில் டேங்க் முழுவதும் பெட்ரோல் போடக் கூடாது என ஐஓசி எச்சரிக்கை கொடுத்ததா?
டெல்லி: வெயில் காலத்தில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்களுக்கு ஆபத்து என்றும் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எச்சரிக்கை விடுத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நடப்பு ஆண்டில் மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெப்பம் வதைக்க தொடங்கி விட்டது. அடுத்த மாதம் அக்கினி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் தொடங்கும். அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் ஒரு பக்கம் அவஸ்தை படும் நிலையில், வெப்ப நிலை அதிகரிப்பை வைத்து சமூக ஊடகங்களில் சில வதந்திகளும் வழக்கம் போல பரவத் தொடங்கி விட்டன. அந்த வகையில், கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOC) வாகன ஓட்டிகளுக்கு வெயில் காலத்தில் மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஒரு அறிக்கை பரவி வந்தது.
அதில், வெப்பம் அதிகரிக்கும் சூழலில் வாகனங்களின் பெட்ரோல் டேங்கில் முழுவதும் பெட்ரோல் நிரப்பக் கூடாது என்று காற்று இருக்கும் வகையில் பாதியளவு மட்டுமே டேங்குகள் நிரப்பபட வேண்டும். முழு டேங்க்கு பெட்ரோல் நிரப்பினால் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இது பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். ஒருபக்கம் இந்த தகவல் சமூக வலைத்தளங்கள் மூலமாக மிக வேகமாக பரவி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பலருக்கும் மத்தியில் பெட்ரோல் போடும் போது தயக்கம் ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், இதுபோன்ற எந்த எச்சரிக்கையும் தங்கள் தரப்பில் விடப்படவில்லை என்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அனைத்து அமைசங்களையும் பரிசீலித்து அதற்கு ஏற்ற வகையில் தான் வடிவமைப்பு செய்வதாகவும்... அதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட படி, எல்லா தட்ப வெப்ப நிலையிலும் பெட்ரோல், டீசல்களை வாகனங்களின் டேங்க் முழுவதும் நிரப்புவதில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வெயில் காலத்தில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்களுக்கு ஆபத்து என்றும் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி பரவியது.
முடிவு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது போன்ற எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. வாகனங்களில் முழு டேங்க் பெட்ரோல், டீசல் நிரப்புவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.












Click it and Unblock the Notifications