மஹாபலிபுரம் ஹோட்டல் அறையில்.. உல்லாச ஜோடிகள் காலில் விஜய் விழுந்ததாக பரவும் போலி தகவல்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மகாபலிபுரத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது விஜய் தவறுதலாக இளம் ஜோடி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இருப்பினும், இது குறித்து நாம் விசாரித்ததில் அது போலி என்றும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கரூரில் கடந்த மாதம் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் இந்தளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. முதலில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விஜய்
சுமார் ஒரு மாதமான பிறகும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சந்திக்காதது பெரும் விவாதமானது. பல்வேறு தரப்பினரும் விஜய்யை இந்த விவகாரத்தில் விமர்சித்தனர். உரிய பெர்மிஷன் கிடைக்காததே இதற்குக் காரணம் என தவெக தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்தினர் மகாபலிபுரத்திற்கு தனி பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். அங்குத் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை நேற்று முன்தினம் சந்தித்த தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
கடந்த இரு நாட்களாகவே இணையம் முழுக்கவே இது இதற்கிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பக இணையத்தில் சில தகவல்கள் பரவின. நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்வில் விஜய் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த ரூமிற்கு பதிலாக இளம் ஜோடி இருந்த ரூமில் தவறுதலாக நுழைந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகச் சொல்லி தகவல்கள் பரவின. பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இது பகிரப்பட்டதால் இது பரபரப்பானது.
போலி கார்ட்
ஒரு கட்டத்தில் பிரபலத் தமிழ் நியூஸ் சேனல் ஒன்றிலும் கூட இதுபோன்ற செய்தி வெளியானது போல கார்ட் ஒன்று பரப்பப்பட்டது. அந்த கார்ட்டில், "விஜய் இளம் ஜோடி காலில் விழுந்ததாகத் தகவல்..! மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஆறுதல் கூறும் நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள அறைக்குப் பதிலாக இளம் ஜோடி இருந்த அறைக்குள் தவெக தலைவர் விஜய் தவறுதலாக நுழைந்து அவர்கள் காலில் விழுந்ததால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டதாகத் தகவல்!" எனக் கூறப்பட்டு இருந்தது.
உண்மை என்ன
இதுபோல பிரபலச் செய்தி நிறுவனத்தின் பெயரிலேயே கார்ட் வெளியானதால் பலரும் இதை உண்மை என நம்ப ஆரம்பித்தனர். மேலும், அந்த கார்ட்டையும் இணையத்தில் பகிர ஆரம்பித்தனர். இதனால் அது டிரெண்டானது. இருப்பினும், நாம் இது குறித்துத் தேடும்போது அதுபோல எந்தவொரு சம்பவமும் நடந்ததாகத் தெரியவில்லை. சிலர் வேண்டும் என்றே தவறான தகவல்களைப் பரப்புவது போலவே தெரிகிறது.
போலி
மேலும், சம்பந்தப்பட்ட அந்தச் செய்தி சேனலும் இது தொடர்பாக விளக்கமளித்துவிட்டது. தாங்கள் இதுபோல எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை என்று அந்த நிறுவனமே விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் விஜய் இளம் ஜோடி காலில் விழுந்ததாகச் சொல்லிக் கடந்த இரு நாட்களாகப் பரவும் செய்தியும், அந்த கார்டும் போலியானது என்பது உறுதியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மகாபலிபுரம் நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள அறைக்குப் பதிலாக இளம் ஜோடி இருந்த அறைக்குள் தவறுதலாக நுழைந்த விஜய், அவர்கள் காலில் விழுந்ததாகத் தகவல் பரவுகிறது
முடிவு
சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனமே இதுபோல கார்ட்டை வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துவிட்டது. இதன் மூலம் இது போலியானது என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications