Fact check: மாற்றுத்திறனாளியிடம் மனு வாங்க மறுத்த திமுக அமைச்சர்? தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன!
சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி அளித்த மனுவை அமைச்சர் ராஜேந்திரன் வாங்க மறுத்ததாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், அதற்குத் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதில் அமைச்சர்களும் நேரடியாகக் கலந்து கொண்டு நேரடியாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குகின்றனர்.

அப்படி தான் சமீபத்தில் சேலத்தில் நடந்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அதில் அவர் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற மறுத்தாக தகவல் பரவியது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அதன்படி சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தான் மாற்றுத்திறனாளி ஒருவர் அமைச்சர் ராஜேந்திரனிடம் மனு தர முயன்றதாகவும் இருப்பினும் அந்த மனுவை வாங்க மறுத்து அவமதித்தாக இணையத்தில் அதிமுக நிர்வாகிகள் விமர்சித்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்திராணி என்பவர், "மாற்றுத்திறனாளி என்ற ஈரம் கூட இல்லாத திமுக அமைச்சர்... ஏன் உங்க கைகள் மனுக்களை வாங்காதோ சால்வைகளை தான் பெறுமோ? ராஜினாமா பண்ணிட்டு போங்க மக்களுக்கு பதில் சொல்ல வலிச்சா" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதற்கிடையே இது பொய்யான தகவல் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "நவ. 5ம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றதோடு, அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
அதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அளித்த மனுவை பெற்றுப் பார்த்த பிறகு அதை முறையாகப் பதிவு செய்யச்சொல்லி அங்குள்ளவரின் மூலம் உதவுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அந்த காட்சியை மட்டும் நீக்கி விட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்" என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
சேலம் ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவர் அளித்த கோரிக்கை மனுவை அமைச்சர் ராஜேந்திரன் வாங்க மறுத்ததாகத் தகவல் பரவியது.
முடிவு
இது பொய்யான தகவல் என்றும் மாற்றுத்திறனாளி அளித்த மனுவை பெற்று, பிறகு அதை முறையாகப் பதிவு செய்ய அங்குள்ளவரின் மூலம் உதவுமாறு அமைச்சர் கூறியதாகத் தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications