Fact Check: ரயில்வே கேட்மேனை பெல்ட்டால் முஸ்லீம்கள் தாக்குவதாக வதந்தி.. உண்மை என்ன?
டெல்லி: இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து கொண்டு அப்பாவி கேட்மேனை தாக்குவதாக இணையத்தில் வீடியோ பரவிய நிலையில் இது உண்மை தானா எனப் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள ரயில் பாதையில் சிலர் இணைந்து கொண்டு அப்பாவி நபர் ஒருவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.. அவர்கள் இணைந்து கொண்டு அந்த அப்பாவி நபரை பெல்ட்டால் அடிக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ரயில்வே கேட்மேன் ஒருவர் முஸ்லீம் ஜிஹாதிகளால் தாக்கப்பட்டார் என்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் வீடியோவை அவர்களே பெருமையுடன் இணையத்தில் பகிர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ: இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவியது. பலரும் இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பு உமிழும் வகையிலான கருத்துகளை இந்த வீடியோ மூலம் திட்டமிட்டுப் பரப்பினர். பலரும் இந்த வீடியோவை பகிர்ந்த நிலையில், இது உண்மை தானா.. இல்லை பொய்யான வீடியோவை இப்படிப் பகிர்ந்துள்ளனரா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இது குறித்து நாம் ஆய்வு செய்யும் போது இது உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோயில் மஹ்முத்பூர் சரய்யா என்ற கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது. விபத்திற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை ஏற்பட்ட நிலையில், அப்போது தான் அங்கிருந்த சிலர் இதை வீடியோவாக எடுத்துள்ளனர். இதில் கேட்மேன் யாருக்கும் தொடர்பு இல்லை என்பதும் நமக்குத் தெரிய வருகிறது.
என்ன நடந்தது: இந்த வீடியோவின் ஸ்கீரின்ஷார்ட்டை நாம் இணையத்தில் தேடும்போது, இது ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹர்டோயின் பிஹானி பகுதியில் நடந்துள்ளது தெரிய வருகிறது. அப்போது மஹ்முத்பூரைச் சேர்ந்த சபா ஹைதர் என்பவர் பைக்கில் சென்ற போது பர்வீன் என்ற பெண் மீது மோதியிருக்கிறார்.. பயத்தில் அவர் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
அப்போது பர்வீன் குடும்பத்தினர் வீடு தேடு வந்து சபா ஹைதரை தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கியுள்ளனர். பின் கொஞ்ச நேரம் கழித்து ஹைதர் மீண்டும் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பர்வீன் குடும்பத்தினர் ரயில்வே டிராக் அருகில் மீண்டும் அவரை நிறுத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது சிலர் எடுத்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது.
போலி செய்தி: அன்றைய தினம் நடந்தது இதுதான். விபத்து காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் நடந்துள்ளது. அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த போலீசாரும் அன்றைய தினம் நடந்தது இதுதான் என்பதை உறுதி செய்துள்ளனர். ஆனால், சிலர் இதை வைத்து போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள்.. இதற்கு மத ரீதியில் ஒரு தொடர்பைக் கொடுத்துத் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்புகிறார்கள்.
அதேபோல ரயில்வே நிர்வாகமும் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. வெளியாட்கள் சிலர் ரயில்வே டிராக்கில் வந்து அடிதடியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கேட்மேனுக்கும் இந்தச் சம்பவத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட மோதலை மதச் சண்டை போலச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டு கேட் மேன் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
முடிவு
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நடந்த மோதல்.. இரு தரப்பும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications