Fact Check: பழமையான இந்து கோவில் மசூதியாக மாற்றப்பட்டதா? பரவி வரும் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: தென்காசி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில், அரசின் உதவியுடன் மசூதியாக மாற்றப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி பார்க்கலாம்.
தென்காசியில் உள்ள இந்து கோயில், தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழமையான கோவிலை அரசு உதவியுடன் கையகப்படுத்தி மசூதியாக மாற்றி உள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உ.பி சம்பவம்: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக சம்பல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
அதன்படி இரு தரப்பினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையர் கடந்த 5ஆம் தேதி மசூதியில் ஆய்வு நடத்தினார். இரண்டாவது முறையாக நீதிமன்ற ஆணையர் ஆய்வுக்கு சென்ற போது, சில கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.
பரவி வரும் தகவல்: இந்தச் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது. இந்தச் சூழலில் தான், சம்பல் மசூதியில் ஆய்வு செய்ததைப் போல, தமிழ்நாட்டில் இங்கும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, தென்காசி முகைதீன் ஆண்டவர் தர்கா வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?: இந்நிலையில், இந்த தகவல் பொய்யானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. பண்டைகால இந்து கோயிலை இஸ்லாமிய தர்காவாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் உண்மையல்ல, பொய்யானது என உண்மை சரிபாப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வீடியோ காட்சியில் இருப்பது, தென்காசியில் உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா. இந்த தர்கா, திராவிட கட்டடக் கலைகளை அடிப்படையாக கொண்டும், முன்னுதாரணமாகவும் கொண்டும் கட்டப்பட்டுள்ளது.
இந்த தர்கா, இஸ்லாமிய அறிஞர் முகைதீன் அப்துல் காதீர் ஜிலானி நினைவாக, 17 ஆம் நூற்றாண்டில் 1674 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தர்காவுக்கு இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் வருகை தருகின்றனர். இந்த தர்காவானது திராவிட கட்டடக் கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளதால், சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு, இந்து கோவில் தர்காவாக கட்டுப்பட்டுள்ளதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
பண்டைகால இந்து கோயிலை இஸ்லாமிய தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பொய்யானது. எனவே இதுபோன்ற பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில், அரசின் உதவியுடன் மசூதியாக மாற்றப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முடிவு
தென்காசியில் உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா, திராவிட கட்டடக் கலைகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது. இந்து கோயில் இஸ்லாமிய தர்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பொய்யானது.












Click it and Unblock the Notifications