Fact Check - “செருப்பு மேட்டர்”.. அண்ணாமலையுடன் மோதல்! அரசியலை விட்டு விலகுவதாக சொன்னாரா பிடிஆர்?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது செருப்புக்கு கூட சமம் இல்லை என்று சொன்னதால் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்து இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 10 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனுடன் செல்போனில் தான் பேசியதாக வெளியான ஆடியோவை ஒப்புக்கொண்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

பிடிஆர் ட்வீட்
இந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் அண்ணாமலை பற்றி ஒருபதிவை வெளியிட்டார். அதில், "நான் ஏன் ஆடு (Emoji) பெயரை சொல்ல மாட்டேன்? 1. வீரமரணம் அடைந்தவரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, 2. தேசியக் கொடி இருந்த காரின் மீது செருப்பு வீச வைப்பது, 3. அப்பட்டமாக பொய் சொல்வது, 4. அரசியல் காரணத்துக்காக மக்கள் உணர்வுகளை தூண்டுவது. அடு போன்ற அற்பமானவர்களின் மனநிலை குறித்து உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு." என்று பதிவிட்டு உள்ளார்.

செருப்புக்கு கூட ஈடில்லை
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன். என் செருப்புக்கு கூட நீங்கள் ஈடில்லை . உங்கள் அளவுக்கு தரக்குறைவாக நான் இறங்க மாட்டேன். எனவே கவலைப்பட வேண்டாம்." என்றார்.

பரவும் செய்தி
இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சால் மனமுடைந்த பழனிவேல் தியாகராஜன் அரசியலை விட்டு விலகப்போவதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. அதில், "கடந்த 18 மாதங்கள் முன்பாக என்னுடைய வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன். இப்போது தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணுகிறேன்." என ஆங்கிலத்தில் குறிபிட்டப்பட்டு இருந்தது.

சந்தேகம்
இது குறித்த உண்மையை நாம் ஆராய முற்பட்டோம். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பிடிஆரின் ட்விட்டர் ஸ்க்ரீன் ஷாட்டில் செப்டம்பர் 1, 2022 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பிடிஆர் கடந்த 2016 தேர்தலிலேயே வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதால் 18 மாதங்கள் என்ற கணக்கு சரியாக இல்லை. பிடிஆரின் ட்விட்டர் பக்கத்தை தேடியபோது செப்டம்பர் ஒன்றாம் தேதி இதுபோன்ற பதிவு இடம்பெறவில்லை. முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகவில்லை.

உண்மை என்ன?
பிடிஆர் சொன்னதாக பரவும் பதிவுள்ள வாக்கியங்களை வைத்து ட்விட்டரில் தேடியபோது, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் இந்த பதிவை வெளியிட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போது நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு பிடிஆர் ட்விட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதியாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன், என்றெல்லாம் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவரது ட்விட்டர் திரெட்டை இணைக்காமல் முதல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து வருடத்தை மட்டும் எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெரிகிறது. எனவே இந்த தகவல் முற்றிலும் தவறானது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலைவிட்டு வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.
முடிவு
2017ல் பிடிஆர் வெளியிட்ட ட்வீட்டை எடிட் செய்து புதியதுபோல் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications