FACT CHECK: “பரிதாபங்கள்” கோபி, சுதாகர் மீது வழக்கா? இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பரபர ட்வீட்
"திருடன் தப்பியோடும்போது பிறரை பார்த்து திருடன் திருடன் என கத்துவான்! அதுபோல திமுக தான் செய்த தவறுகளுக்கு பிஜேபி மீது பழி போடுகிறது.” என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டு இருகிறார்
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து வெளியிட்டதாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதன் உண்மைதன்மை பற்றி அலசுவோம்.
யூடியூபில் பரிதாபங்கள் என்ற சேனலை நடத்தி வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். தற்போதைய சூழலில் உள்ள ஏதாவது ஒரு விசயத்தை அல்லது பிரச்சனையை பகடி செய்து வீடியோக்களை வெளியிடுவது இவர்களின் வழக்கம்.
இதுபோல் 387 வீடியோக்களை வெளியிட்டு இருக்கும் இவர்களின் சேனலுக்கு 45 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். திரைப்படம் எடுப்பதாக மக்களிடம் கோடிக்கணக்கில் கரவுட் பண்டிங் முறையில் பணம் வசூலித்துவிட்டு இவர்கள் படம் எடுக்கவில்லை என்ற புகார் இவர்கள் மீது உள்ளது.

வடக்கு ரயில் பாவங்கள்
இது அல்லாமல் சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் இருவரும் நடித்து இருக்கிறார்கள். தற்போது வேறொரு படத்தில் இவர்கள் இருவரும் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர்கள் "வடக்கு ரயில் பாவங்கள்" என்ற பெயரில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

வட மாநில தொழிலாளர்கள்
வட இந்திய தொழிலாளர்கள் ரயிலில் தமிழ்நாட்டுக்கு வருவதையும், அவர்கள் குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்து தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை போன்றும் சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ பெரும் தாக்கத்தையே மக்கள் மனதில் ஏற்படுத்தியது. பலரும் அதை அதிகளவில் பகிர்ந்திருந்தார்கள்.

தாக்கப்படுவதாக வதந்தி
இந்த நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதாகவும் கூறி போலியான வீடியோக்களையும், பழைய வீடியோக்களை வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

போலீஸ் வழக்குப்பதிவு
இதனால் தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலை பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு காவல்துறை வதந்தி பரப்பிய பீகார் மாநில பாஜகவினர், பாஜக செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கையாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலர் மீது வழக்குப்பதிவு செய்தது.

அர்ஜுன் சம்பத் பதிவு
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ட்விட்டரில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தி படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கோபி, சுதாகர் மீது வழக்கு
"வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து பரப்பியதாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது புகார்" என்று அந்த செய்தி கார்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதை பதிவிட்ட அர்ஜுன் சம்பத், "வட மாநில தொழிலாளர்கள் குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்ததாக பாஜக, நாம் தமிழர், கோபி சுதாகர் உள்ளிட்ட யூட்யூபினர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு!

திமுக அரசு மீது விமர்சனம்
திருடன் தப்பியோடும்போது பிறரை பார்த்து திருடன் திருடன் என கத்துவான்! அதுபோல திமுக தான் செய்த தவறுகளுக்கு பிஜேபி மீது பழி போடுகிறது." என்று குறிப்பிட்டு இருகிறார். அர்ஜுன் சம்பத் வெளியிட்ட பதிவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ஊடகத்தின் சமூக வலைதள பக்கங்களில் இந்த செய்தியே இல்லை.

உண்மை என்ன?
இது குறித்து YOU TURN என்ற உண்மை கண்டறியும் இணையதளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், தங்கள் மீது இது தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், அது போலியான செய்தி எனவும் சுதாகர் தங்களிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இது வதந்தி என நாம் முடிவுக்கு வருகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோ வெளியிட்டதாக யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவு
முடிவு
அர்ஜுன் சம்பத் பகிர்ந்த ஊடகத்தின் செய்தி கார்டு போலியானது. அதை தொலைக்காட்சி வெளியிடவே இல்லை.












Click it and Unblock the Notifications