நிலம் கையகப்படுத்துவதிலேயே 1008 பிரச்சினை.. அதற்குள் எய்ம்ஸ் திறக்கப்பட்டதாக சொன்ன மோடி! உண்மை என்ன
டெல்லி: பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துச் சொன்ன தகவல்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி சொன்னது உண்மை தானா என்பதை நாம் இதில் பார்க்கலாம்.
நாட்டில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதிலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அதேபோல ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் கடந்த முறையைப் போலவே ஒரு வலுவான வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.
பாஜக கூட்டம்: இதற்காக பாஜக நாடு முழுக்க பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு எடுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் பாஜகவின் பிராந்திய பஞ்சாயத்து ராஜ் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அசாமின் கவுகாத்தி, மேற்கு வங்காளத்தின் கல்யாணி, ஜார்கண்டின் தியோகர் மற்றும் பீகாரில் தர்பங்கா ஆகிய இடங்களில் புதிய எய்ம்ஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இனிமேல் இங்குள்ள மக்கள் சிகிச்சை பெற பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியதில்லை" என்று பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் பிரதமர் மோடியின் ட்விட்டரிலும் பகிரப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி பேச்சு: இதில் பீகார் தர்பங்காவில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கவே இல்லை. அப்படி இருக்கும் போது அங்கே எய்ம்ஸ் திறக்கப்பட்டதாகவும் இதனால் மக்கள் பயனடைவதாகவும் பிரதமர் மோடி பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமரே இந்தக் கருத்தைச் சொன்னதால் இது உண்மை தானா இல்லை பொய்யா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
இது குறித்து நாம் தேடிப் பார்க்கும் ரோது கடந்த 2021ஆம் ஆண்டில் மத்திய சுகாதா துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் ராஜ்ய சபாவில் அளித்த நம்மால் பார்க்க முடிகிறது. அதில் பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தில் மொத்தம் 22 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இப்போது செயல்பட்டு வருவதாகவும் மீதமுள்ள 10 எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நிலத்திலேயே பிரச்சினை: இது தொடர்பாக கடந்த 2022 ஜூலை 22ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை வேறு ஒரு அப்டேட்டையும் கொடுத்திருந்தது. அதில் பிரதமர் மோடி குறிப்பிட்ட தர்பங்காவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலம் இன்னும் கையகப்படுத்தித் தரவில்லை என்பதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். நாம் பீகாரில் வெளியாகும் செய்திகளை ஆராய்ந்த போது இப்போது வரை அந்த எய்ம்ஸுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளே முடிவடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி வரை இது குறித்த செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் அங்கு எய்ம்ஸ் கட்டுமானம் நிறைவடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்குள்ள மாநில அரசு வேறு ஒரு நிலத்தை எய்ம்ஸ் கட்ட ஒதுக்கும் போதிலும் அதை, மத்திய அரசு ஏற்கவில்லை எனத் தெரிகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினையால் எய்ம்ஸ் கட்டுமானமே நிறைவடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
பீகார் மாநிலத்தில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் பல ஆயிரம் பேர் பயன் பெறுகிறார்கள்
முடிவு
நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினையால் அங்கு எய்ம்ஸ் கட்டுமானம் இன்னும் தொடங்கக் கூட இல்லை












Click it and Unblock the Notifications