Fact Check: தஞ்சை மாரியம்மன் கோயில் குரங்கு மண்டபம்.. இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டிலா? பரவும் வதந்தி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குரங்கு மண்டபம் தற்போது இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் இந்த இடத்தை அபகரித்துக்கொண்டதாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால், இதில் உண்மை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
தஞ்சையில் சமுத்திரம் ஏரியின் கிழக்குப் பகுதியில் பழைய மாரியம்மன் கோயில் சாலை வழியில் மாரியம்மன் கோயிலுக்கு முன்னதாக அமைந்துள்ள இம்மண்டபம் மராட்டியர் காலத்தில் (கி.பி. 1675-1855) கட்டப்பட்டது. செங்கல், கருங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ள இம்மண்டபம் மராட்டியர் கட்டடக்கலைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மிகவும் உயரமான தூண்கள், பிரதானங்கள், வளைவுகள், முன் மண்டபங்களுடன் உள்ள அற்புதமான இக்கட்டிடம் இந்தோ- இஸ்லாமிய கலைப்பாணியிலானதாகும்.

சமுத்திரம் ஏரியின் அழகையும், இயற்கைச் சூழலையும் கண்டு மகிழ ஏதுவாக இம்மண்டபம் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சற்று மேற்கில் உள்ள சமுத்திரம் ஏரியில் படகு சவாரி செய்தபின், ஓய்வு எடுக்கும் மாளிகையாகவும் இக்கட்டிடம் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மாரியம்மன் கோயில் விழாக்களுக்கும் இது பயன்பட்டிருந்தது. மாரியம்மன் கோயில் விழாக்களில் வழிபாட்டிற்கு வரும் அரச குடும்பமும், சுற்றியிருந்த காடுகளில் வேட்டையாட வரும் மன்னர்களுக்கு தங்கும் மாளிகையாகவும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மன்னர்கள் காலத்திற்குப்பின் தஞ்சையில் ஏற்பட்ட அரசியல் சூறாவளியில் சிக்கிய இம்மாளிகையும் பாழடைந்த மண்டபமாகிப் போனது. அருகிலுள்ள மாரியம்மன் கோயிலில் பிரசாதமாக விற்கப்படும் விரல் அளவிலான சிறிய சுற்று முறுக்கு தயாரிப்பவர்கள் இப்பகுதியில் வசிப்பதால் "முறுக்கு மண்டபம்" என்றும், காடுகள் சூழ இருந்த காலத்தில் குரங்கு கூட்டம் கொட்டமடித்ததால் "குரங்கு மண்டபம்" என்றும், ராணிகள் தங்கி போகுமிடமாதலால் "ராணி மண்டபம்" என்றும், சுரங்கம் இருப்பதாகக் கருதப்படுவதால் "சுரங்க மண்டபம்" என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், இம்மண்டபத்தில் மாலை வேளையில் பாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்து கேட்ட மூத்த குடிமக்களும் உண்டு.
இப்படி இருக்கையில் இந்த மண்டபம் தற்போது பராமரிக்க ஆள் இல்லாமல் இருப்பதாகவும், இஸ்லாமியர்கள் தற்போது இந்த இடத்தை பராமரித்து வருவதாகவும் x சோஷியல் மீடியா தளத்தில் வீடியோக்கள் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.

அதாவது, இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்துள்ள விளக்கத்தில், "வீடியோவில் காண்பிக்கப்படும் இடம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் மதம் தொடர்பான எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications