Fact Check: 6 மாதங்களில் 35 கிலோ வளரும் ஆடு? தமிழ்நாடு முழுக்க தீயாக பரவும் தகவல் நிஜமா?
சென்னை: கோழிகளை பிராய்லர் முறையில் வளர்ப்பதை போல, ஆடுகளும் பிராய்லர் முறையில் வளர்க்கப்படுவதாக வதந்தி பரவி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விளக்கமளித்திருக்கிறது.
பிராய்லர் கோழிகள் குறித்து மக்களிடையே உண்மைக்கு மாறான கருத்துக்கள் இருந்த வருகிறது. இக்கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும்போது, குறுகிய காலத்தில் அதிக எடை கொண்ட கோழியாக சீக்கிரம் வளர, அவற்றிற்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுவதாகவும், எனவே இதை உட்கொள்ளும்போது மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைய காலத்தில் ஒரு ஹார்மோன் ஊசியின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும். கோழி சீக்கிரமாக வளர, இந்த ஊசியை பயன்படுத்த வேண்டும் எனில் எப்படி இருந்நதாலும் ரூ.23,000 வரை செலவாகும். ஒரு கோழிக்கே இவ்வளவு விலை எனில், பண்ணையில் வளரும் அத்தனை கோழிகளுக்கும் இதை பயன்படுத்தினால், செலவு எவ்வளவு ஆகும்? ஆனால் இறைச்சி கடையில் எப்பவும் கோழி கிலோ ரூ.230-250க்கு கிடைக்கிறது? அப்படியெனில் ஹார்மோன் ஊசியை கோழி வளர்ப்பவர்கள் பயன்படுத்துவதில்லை என்று அர்த்தம்.
அடிப்படையில் பிராய்லர் கோழி என்பது தனி இனம். இது குறைந்த நாட்களில் வேகமாக வளரும் பண்பு கொண்டது. அதேபோல இதற்கு நோய் தாக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதைத்தான் ஹார்மோன் ஊசி என்று பலரும் தவறாக கூறுகின்றனர். அதேபோல இந்த இறைச்சியை உட்கொள்வதால், மலட்டுத்தன்மை, விரைவில் பருவம் எய்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது.
இப்படி இருக்கையில், கோழியை தொடர்ந்து தற்போது ஆடும் கூட பிராய்லர் முறையில் வளர்க்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, "போயர் என்ற வகையைச் சார்ந்த, ஏழு மாதத்தில் 35 கிலோ வரை சதை பிடித்து வளரக்கூடிய அடுத்த பிராய்லர் வகை ஆடுகள் தமிழ்நாட்டில் விற்பனைக்குத் தயாராகி வருகின்றன" என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இது தவறான தகவல் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விளக்கமளித்திருக்கிறது. இது குறிதது பல்கலைக்கழகத்தின் இயக்குநர் கூறுகையில், "ஆடுகளில் பிராய்லர் என்ற வகையே கிடையாது. போயர் வகை ஆடுகள் தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்த ஆடுகள் 6 மாதங்களில் 24 கிலோ எடை வரை வளரும். கலப்பின விருத்தி அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த வகை ஆடுகள் உற்பத்தியாகின்றன. ஆனால் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆடுகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிவியல்பூர்வ சான்றுகளும் இல்லை" என்று கூறியுள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாட்டில் ஆடுகளும் பிராய்லர் முறையில் வளர்க்கப்படுகிறது
முடிவு
ஆடுகளில் பிராய்லர் முறை கிடையாது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விளக்கமளித்திருக்கிறது












Click it and Unblock the Notifications