மார்பில் பூட்ஸ் காலால் மிதி! முஸ்லீம் இளைஞர் சித்திரவதை! நூஹ் வன்முறை என தீயாக பரவிய படம்! 100% பொய்
டெல்லி: ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கலவரத்திற்குப் பிறகு, நூஹ் மாவட்டத்தில் போலீசார் வன்முறையாளர்களுடன் இணைந்து இஸ்லாமிய இளைஞரைத் தாக்குவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பதை பார்க்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரம் தொடர்வது அனைவருக்கும் தெரியும். மணிப்பூரில் இன்னுமே கூட முழுமையாக அமைதி திரும்பாத சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே இம்மாத தொடக்கத்தில் ஹரியானாவிலும் வன்முறை ஏற்பட்டது.

அந்த வன்முறைச் சம்பவத்தால் சில உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. அங்கு நூஹ் என்ற இடத்தில் முதலில் ஏற்பட்ட வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் கூட பரவியது. இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த அங்கே இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
வன்முறை: ஹரியானாவில் நூஹ் மாவட்டத்தில் மத ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அங்கு பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து ஊர்வலம் நடத்தின. அப்போது ஊர்வலத்தை நோக்கி சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மதக்கலவரம் கூட ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட மதக் கலவரம் குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது.
இந்த வன்முறையில் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த வன்முறையைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்ட போலீசார் பலரும் கூட காயமடைந்துள்ளனர். அங்கு குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் சில நாட்கள் வரை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்குள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கும் கூட தீ வைக்கப்பட்டது. இதனால் அங்குப் பல நாட்கள் பதற்றமான சூழலே ஏற்பட்டது. இப்போது தான் அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சித்திரவதை: இதற்கிடையே ஹரியானா போலீசார் நூஹ் இந்து அமைப்பினருடன் இணைந்து முஸ்லீம் ஒருவரை சித்திரவதை செய்வதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவியது. அங்கு இப்போது தான் மெல்ல அமைதி திரும்பும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் இதைப் பகிர்ந்தனர். அதில் காக்கி உடை அணிந்திருக்கும் சிலர் இணைந்து கொண்டு, அந்த நபரைத் தாறுமாறாகத் தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளன. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த வீடியோ உண்மை தானா.. இது எப்போது எங்கு நடந்தது.. இதற்கும் ஹரியானா சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். இந்த வீடியோவை நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தேடும் போது, இது TEGIYA BANGLES என்ற யூடியூப் சேனலுக்கு எடுத்துச் செல்கிறது. அவர்களுக்கும் இதை வீடியோவை பகிர்ந்துள்ளனர். மேலும் இது குறித்துத் தேடிப் பார்க்கும் போது தான் dosti ki saja என்ற பெயரில் ஒரு குறும்படம் வந்தது தெரிய வந்தது.
உண்மை என்ன: அதில் உள்ள காட்சிகளைப் பார்த்த போது தான், ஹரியானாவில் நடக்கும் கொடூரம் என்று சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ இதில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரிகிறது. இந்த குறும்படம் ஜூலை 28ஆம் தேதி யூடியூபில் வெளியாகியுள்ளது. அதாவது நூஹ் கலவரம் ஏற்படும் முன்பே இந்த வீடியோ இணையத்தில் இருப்பதும்.. இது குறும்படத்தின் வீடியோ என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
இதில் இருக்கும் மேக்கிங் வீடியோக்களை நாம் பார்க்கும் போது கேமரா மேன் கூட ஒரு சில காட்சிகளில் தெரிகிறார். மேலும், இதில் உள்ள நபர்களும் சில படங்களிலும் நடித்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் நூஹ் வன்முறையைத் தொடர்ந்து அங்கு இஸ்லாமியரை போலீசார் அடித்துக் கொடுமைப்படுத்துவதாகப் பரவும் தகவல் போலி என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
ஹரியானாவில் நூஹ் மாவட்டத்தில் இஸ்லாமியர் ஒருவரை போலீசார் கொடுரமாக அடித்து சித்திரவாதை செய்கிறார்கள்.
முடிவு
இது முழுக்க முழுக்க போலியான செய்தி. சினிமா படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியாகும்.












Click it and Unblock the Notifications