Fact Check: கோவையில் கயிறு ஏற்றுமதி ரூ.1000 கோடி குறைந்ததா? பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு உண்மையா?
சென்னை: கோவையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு ஆண்டுதோறும் ரூ.1000 கோடி மதிப்பில் கயிறு ஏற்றுமதி குறைந்துவிட்டதாகக் கூறி பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் ஒரு அட்டவணையைப் பதிவிட்டுள்ளார். இந்த டேட்டா உண்மையானது அல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
பாஜக தொழில் பிரிவு மாநில தலைவர் செல்வக்குமார் தமது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தரவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், "ஏற்றுமதியில் 80%க்கும் அதிகமான பங்களிப்பை கோயம்புத்தூர் மாவட்டத்தை மையமாகக் கொண்ட தென்னை நார்த் தொழிற்சாலைகள் வழங்குகின்றன.

செந்தில்பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராகப் பதவியேற்ற உடனேயே, நவம்பர் 2021 இல், தென்னை நார்த் தொழில்களை கடுமையாகப் பாதிக்கும் புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை திமுக அரசு கொண்டு வந்தது.
தென்னை நார் தொழிற்சாலைகள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. ஒட்டுமொத்த பாதிப்பும் மிகவும் மோசமாக உள்ளது. கோவை தொழிற்சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்துள்ளன.
இதன் பாதிப்பு தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, தென்னை மட்டைக்கு நல்ல விலை பெற்று வந்த தென்னை விவசாயிகள் கூட, வரத்து அதிகமாக இருப்பதாலும் தேவை குறைந்ததாலும் வருமானம் பெற முடியாமல் தவிக்கின்றனர்." எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்த குற்றச்சாட்டு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.

உண்மை என்ன?: இது கோவைக்கு மட்டுமான தரவல்ல, இந்தியா முழுமைக்குமான தரவு. அதுவும் தவறாக உள்ளது. 2022-23-ல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த தென்னை நார் பொருட்களின் அளவு, 2021-22 ஐ காட்டிலும் 2.4% கூடுதலாகவே உள்ளது. சர்வதேச அளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்றுமதி மதிப்பு குறைந்துள்ளதே தவிர மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் இதற்குக் காரணமில்லை. உற்பத்தி அளவும் குறையவில்லை.
தேசிய கயிறு வாரியம் வெளியிட்ட தரவின்படி, இந்திய அளவில் தென்னை நார் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மதிப்பு அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2023- 2024 ஆம் ஆண்டில், 339690.84 லட்சம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சரான பிறகு கோவையில் ரூ.1000 கோடி மதிப்பில் கயிறு ஏற்றுமதி குறைந்துவிட்டதாக ஒரு அட்டவணையுடன் தகவல் பரவி வருகிறது.
முடிவு
பரவி வரும் டேட்டா தவறானது. தேசிய கயிறு வாரியம் வெளியிட்ட தரவு மாற்றப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications