Fact Check: இந்துக்களுக்கு மட்டும்தான் குடும்ப கட்டுப்பாடா? வதந்தியை பரப்பும் இந்து முன்னணி!
சென்னை: மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க குடும்ப கட்டுப்பாடு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்துக்களுக்கு மட்டுமே குடும்ப கட்டுப்பாடு நடத்தப்படுவதாக, இந்து முன்னணி விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
கட்டுப்பாடு என்பது எல்லாவற்றுக்கும் அடிப்படை. இது மக்கள் தொகைக்கும் பொருந்தும். இந்தியா வளர்ந்து வந்த காலத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதே நேரம், குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. காரணம் தொடர் கருவுற்றல்தான். பெண்கள் தொடர்ந்து கருவுறுவதால், ஏற்கெனவே பிறந்த குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் போகும் சிக்கல் எழுந்தது. அதே நேரத்தில், தொடர் கருவுறுதல் பெண்களின் முன்னேற்றத்தை ஒரேயடியாக முடக்கிவிட்டது.

இப்படி யோசித்து பாருங்களேன்.. ஒரு குடும்பத்தில் 7 குழந்தைகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் சுமார் ஓர் ஆண்டு இடைவெளி இருக்கிறது. அப்படியெனில், மூத்த குழந்தை 7 வயதை தொடும் போது இளைய குழந்தையை தாய் முழுமையாக பராமரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், 7 வயது குழந்தைக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது. இப்படி இருக்கையில், குழந்தை பராமரிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. மறுபுறம் குழந்தை பேறு விஷயத்தில் பெண்களின் சுதந்திரம் முடக்கப்படுகிறது.
இவை அனைத்துக்கும் தீர்வு காணும் விதமாகத்தான் குடும்ப கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அது அனைத்து மக்களுக்கும் பயனளிக்கவும் பின்னாட்களில் உதவியது. இன்றும் குடும்ப கட்டுப்பாடு என்பது அவசியமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இது குறித்து அச்சப்பட்ட மக்கள், தற்போது தாங்களாக முன்வந்து இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில், தாய்மார்களின் அனுமதியுடன், தேவையானோருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது.
ஆனால், வலதுசாரி குழுக்கள், மதவாத குழுக்களிடையே இது குறித்த அபத்தமான வாதம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்துகளுக்கு மட்டுமே குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதுவும் சாதி வாரியாக நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அப்படி நடத்தப்பட்டால், உண்மையில் கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்த சமூகத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் மத்திய அரசு இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.
இப்படி இருக்கையில், தமிழ்நாட்டிலும் இந்துக்களுக்கு மட்டுமே குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது என்கிற வதந்தி பரவ தொடங்கியுள்ளது. இந்து முன்னணி இதனை பரப்பி வருகிறது.
இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை விளக்கமளித்திருக்கிறது. அதாவது, “இது மத வெறுப்பைத் தூண்டும் பொய் பிரச்சாரம். அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு மத அடிப்படையில் செய்யப்படுவதில்லை. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவக் காரணங்களால் சில தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவை மருத்துவர்களால் நிராகரிக்கப்படுவதும் உண்டு” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் இந்துக்களை மட்டும் கருவறுக்கும் வேலை தொடர்ந்து நடந்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாட்டை அனைத்து மதத்தினருக்கும் கட்டாயமாக்க வேண்டும்.
முடிவு
அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு மத அடிப்படையில் செய்யப்படுவதில்லை. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications