Fact check: இன்னும் உரிமைத்தொகை ரூ.1000 வரல.. இந்த ஃபார்மை நேரில் தரவேண்டும் என்ற தகவல் உண்மையா?
சென்னை: மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என படிவம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது வதந்தி என மறுத்துள்ளது தமிழக அரசு.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த திட்டத்திற்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எனவும் பெயரிடப்பட்டது. அரசு அறிவித்த விதிமுறைகளின்படி 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகையாக ரூ. 1000 வழங்கப்பட்டது.
மேலும், விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யவும், புதிதாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதனால் இதன் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால், இப்போது அதில் புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
பரவி வரும் தகவல்: இந்நிலையில், கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக ஒரு தகவல் பரவி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி ஒரு படிவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?: ஆனால், இது போன்று எந்த விண்ணப்பத்தையும் வெளியிடவில்லை என மறுத்துள்ளது தமிழக அரசு. விண்ணப்ப மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். கள ஆய்வு தேவைப்பட்டால் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுபி வைக்கப்படும். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாகவே செய்யப்படும். நேரடியாக மனு பெற்று தீர்வு செய்யக்கூடாது என முன்பே இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி ஒரு படிவம் பகிரப்பட்டு வருகிறது.
முடிவு
இது வதந்தி என்றும், மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாகவே செய்யப்படும். நேரடியாக மனு பெற்று தீர்வு செய்யக்கூடாது என் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications