FACT CHECK: கீழக்கரை மசூதி கோயிலா.. பதற்றத்தை ஏற்படுத்திய இந்து முன்னணி பதிவு! உண்மை வரலாறு என்ன?
ராமநாதபுரம்: கீழக்கரையில் உள்ள பழைய ஜும்மா மசூதியை இந்து கோயில் என்று இந்து முன்னணி தெரிவித்து இருக்கும் நிலையில் அது குறித்த உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
இந்து முன்னணியின் பேஸ்புக் பக்கத்தில், "இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயிலும் கீழக்கரை பள்ளிவாசலும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டது என வரலாற்று ஆதாரம் இல்லாத பொய் செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயிலும் சுமார் 350 வருடங்களுக்குள்ளேயே கட்டப்பட்ட மசூதியும் எப்படி ஒரே சமயத்தில் கட்டப்பட்டதாக இருக்க முடியும்...?

அயோத்தி, மதுரா, காசியை, போன்று கீழக்கரை மசூதியும் முன்பு இந்து ஆலயமாக இருந்தது என அந்தப் பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
கீழக்கரை பள்ளிவாசல் பற்றிய உண்மை செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்த தேசிய தொல்லியல்துறை பள்ளிவாசலை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி பெயரில் புகைப்படமும், பதிவும் வெளியாகி இருக்கிறது. இந்து முன்னணியின் இந்த பதிவால் மத ரீதியிலான கருத்துப் பரிமாற்றங்களும் பதற்றமான நிலையும் ஏற்பட்டு உள்ளன.

இந்து முன்னணியின் இந்த தகவல் குறித்து உண்மை அறியும் சோதனை மேற்கொண்டோம். பிரபல உண்மை அறியும் இணையதளமான யு டர்ன் வெளியிட்ட கட்டுரையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத்தெருவில் அமைந்து இருக்கும் இந்த ஜும்மா மசூதியின் உள் தோற்றம், தூண்கள் அமைப்பு என்பது பாரம்பரிய தமிழ் கட்டிட கலை அமைப்பில் உள்ளதால் கோயிலாக இருக்கலாம் என கூறப்படுவதாகவும், அரசியல் சார்ந்து மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மசூதியின் தூண்களை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி அவதூறு பரப்புவதாக யு டர்ன் விமர்சித்து இருந்தது.

முன்னணி சர்வதேச ஊடகமான பிபிசியும் இந்த மசூதியின் வரலாற்றை செய்தியாக்கி இருக்கிறது. இந்த மசூதி குறித்து முன்னணி தமிழ் தொலைக்காட்சியும் விரிவான வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் மசூதி திராவிடக் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மசூதி தங்கள் ஊரின் அடையாளமாக திகழ்வதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்று சொல்லப்படும் கேரளாவின் சேரமான் ஜும்மா மசூதி, குஜராத்தின் பர்வாடா மசூதிகளின் காலத்தில் இந்த மசூதியும் கட்டப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை வெளியிட்டு உள்ளது.

பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் கடல் வானிபத்துக்காக கீழக்கரை வந்த ஏமன் நாட்டை சேர்ந்த வனிகர்கள் மூலமாக அப்பகுதியில் இஸ்லாம் பரவி அவர்கள் உதவியுடன் இந்த மசூதி கிபி 628 - 630 களில் கட்டப்பட்டதாகவும், 11 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற சஹீத் போருக்கு பின்னர் இந்த மசூதி மறுகட்டமைப்பு செய்யப்பட்டதாகவும் மற்றொரு வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகவும் பழமையான மசூதிகளில் இது ஒன்று என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோன்று இந்திய வரலாற்றை பதிவு செய்யும் ஹெரிடேஜ் ஆன்லைன் என்ற இணையதளத்தில் டாக்டர் நந்திதா கிருஷ்ணாவும் இந்த தகவல்களை தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட இந்த மசூதி மீண்டும் சேதுபதி ஆட்சியின்போது வள்ளல் சீதக்காதியால் 17 ஆம் நூற்றாண்டில் புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் ஒரு கூற்று உள்ளது. மற்றொரு தகவலில் 17 ஆம் நூற்றாண்டில்தான் இந்த மசூதி முதலில் கட்டுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டுகள் மாறுபட்டாலும் இந்த மசூதி என்பதை நிரூபிக்கும் பல்வேறு வரலாற்று தரவுகள் உள்ளன. ஆனால், கோயில் என்பதற்கு எந்த விதமான ஆதாரமோ சான்றோ இல்லை. இந்து முன்னணி பதிவில் கூட, மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே தவிர உறுதியான கருத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. எனவே இந்து முன்னணியின் அந்த பதிவுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

Fact Check
வெளியான செய்தி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பழைய ஜும்மா பள்ளி முன்பு கோயிலாக இருந்து மசூதியாக மாற்றப்பட்டதாக இந்து முன்னணி பதிவு
முடிவு
கோயில் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. முதலில் மசூதி கட்டப்பட்டது என்பதை நிரூபிக்கும் பல்வேறு சான்றுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications