Fact check: அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி! வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு! அரசு சொல்வதென்ன?
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது உண்மையா? பின்னணியில் என்ன நடந்தது? என பார்க்கலாம்..
முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் புகழ்பாடும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ஆம் தேதி இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடனும் கொண்டாட்டங்களுடனும் கொண்டாடப்பட இருக்கிறது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்ட்டை செய்யப்படவுள்ள விநாயகர் சிலைகள் மூன்று நாள் பூஜைகளுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட இருக்கிறது. இதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படவுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதற்காகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் "விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.,7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்" என சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியியுள்ளனர். அந்த சுற்றறிக்கையை திரித்து அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாகப் பரப்பி வருவது தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என சுற்றறிக்கை
முடிவு
சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்று தான் சுற்றறிக்கை












Click it and Unblock the Notifications