தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக குறைந்தது.. அடிசக்க.. அப்போ ஒரு பவுன் தங்கம் விலை என்ன?
தங்கம் வாங்க நினைக்கும் மக்களுக்கு மோடியின் 15 சதவீத இறக்குமதி உயர்வு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் கடந்த 2 நாட்களாக சர்வதேச சந்தை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, திருமணம், பண்டிகை மற்றும் முதலீடு ஆகிய காரணங்களுக்காக தங்கம் வாங்கும் சாமானிய குடும்பத்தினர் இந்த விலை குறைவால் பெரிதும் பயனடையப் போகின்றனர்.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கு கிடைக்கிறது. காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், மாலையில் கூடுதலாக குறைந்து மொத்தமாக ரூ.1,480 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு முறை விலை குறைவும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை மாற்றமின்றி நிலையாக உள்ளது
தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலையில் பெரிய மாற்றம் இல்லை. காலையில் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்திருந்தாலும், மாலையில் விலை மாற்றமின்றி நிலையாக உள்ளது. தற்போது வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.305க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஏன் குறைகிறது?
தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உலக சந்தையில் ஸ்பாட் தங்கம் 2 சதவீதம் குறைந்து 4,558 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்காவில் பத்து ஆண்டு பத்திர வட்டி விகிதம் 4.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அதேநேரம் அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, இந்தியாவில் இறக்குமதி வரி குறைவால் தங்கத்திற்கான தேவை மொத்தமாக குறைந்துள்ளது. இத்தகையை காரணங்களால் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
தங்கம் இறக்குமதி விதிகள்
மத்திய அரசு டாலர் வெளியேறலை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இனி 100 கிலோ வரை தங்கம் இறக்குமதி செய்ய முன் அங்கீகாரம் (advance authorization) தேவைப்படும். அதற்குப் பிறகு இறக்குமதி செய்ய வேண்டுமானால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்த பிறகே அனுமதி கிடைக்கும். இதற்கு முன்பு நகை ஏற்றுமதியாளர்கள் எவ்விதமான வரம்பும் இல்லாமல் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. இந்த புதிய விதிகள் தங்கத்தின் உள்நாட்டு தேவையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை போக்கு எப்படி இருக்கும்?
உலகளாவிய சந்தையில் தங்கம் மீதான விலை பாதிப்பு தொடரும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவில் ரீடைல் விற்பனை மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு தரவுகள் சற்று பலவீனமாக இருந்தாலும், பொருளாதாரம் இன்னும் வலுவாகவே உள்ளது.
இதனால் தங்கத்தின் விலை 4,500 அல்லது 4,480 டாலர் வரை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. எதிர்ப்பு நிலை 4,603, 4,638, 4,670 டாலராக இருக்கும் என்று மிரே அசெட் ஷேர்கான் நிறுவனத்தின் பொருட்கள் துறைத் தலைவர் பிரவீன் சிங் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை குறைவு தொடர்ந்தால், திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் இந்திய மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும். ஆனால் முதலீட்டாளர்களுக்கு தங்கம் மீதான முதலீட்டில் பெரும் பாதிப்பு இருக்கும்.












Click it and Unblock the Notifications