அட்ஷய திருதியை: ஒரே ஆண்டில் தங்கம் விலை இவ்வளவு கூடியிருக்கா? அடேங்கப்பா.. நகை பிரியர்கள் கலக்கம்
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.70 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் சூழலில், அட்சய திருதிக்கு தங்கம் விற்பனை அதிகரிக்குமா அல்லது குறைந்துவிடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அட்சய திருதியை நாளில் 20 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என்றும் தங்கம், வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உயரும் போது ஜெட் வேகத்திலும், குறையும் போது ஆமை வேகத்திலும் தங்கம் விலை இருந்து வருகிறது. நகைகள் மீது அதிக பிரியம் கொண்ட இந்தியர்களுக்கு தங்கம் விலை உயர்வு பேரிடியாக அமைந்தது.

கண்டபடி உயரும் தங்கம் விலை
எப்போது தான் விலை குறையும் என்று எதிர்பார்த்த நகைப்பிரியர்களுக்கு நாள்தோறும் தங்கம் விலை ஷாக் கொடுத்து வருகிறது. இதனால் கனவில் தான் தங்க நகை வாங்க முடியுமோ என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு சவரன் 70 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்று பயந்த நிலையில், இனிமேல் 80 ஆயிரத்தை எப்போது தொடும் என்று தான் நினைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தங்கம் விலை உயர்வு இருந்து வருகிறது.
கடந்த ஆண்டில் எல்லாம் தங்கம் விலை இப்படி உயரவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.60,000 என்று இருந்த தங்கம் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.65,000 ஆனது. அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த விலை ரூ. 5 ஆயிரம் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.70,000 கடந்து விட்டது.
அட்சய திருதியை நாள்
இப்படி தங்கம் விலை கண்மூடித்தனமாக உயர்ந்து கொண்டே செல்வதால், அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனையில் பாதிப்பு ஏற்படும், நகை விற்பனை மந்தமடையும் என்று பேசப்பட்டது. ஆனால் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது:-
நாளை மறுநாள் புதன்கிழமை அட்சய திருதியை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் வழக்கமாக விலை குறைந்து இருந்தால் இந்த சமயத்தில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். இப்போது விலை அதிகரித்து உள்ளது. இருந்த போதிலும் தங்கம் விற்பனையில் பெரிதாக மாற்றம் இருக்காது. அட்சய திருதியை நாளில் 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பல்வேறு சலுகைகள்
ஏனென்றால் தங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மேலும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.
அட்சய திருதியை நாளில் வாடிக்கையாளர்களுக்காக நகைக் கடைகள் காலையிலேயே திறக்கப்படும். காலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறந்து இருக்கும். இதற்காக பல்வேறு நகைக்கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோன்று பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அன்று தங்க நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி கிடையாது, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரே ஆண்டில் 19 ஆயிரம் அதிகரிப்பு
இதேபோன்று முன்பதிவு செய்து தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது முன்பதிவு செய்த நாளில் இருந்து அட்சயதிருதியை நாளுக்குள் எந்த நாளில் தங்கம் விலை குறைவாக இருக்கின்றதோ? அந்த நாளில் உள்ள தங்கம் விலைக்கு அட்சய திருதியை நாளில் நகை வாங்கி கொள்ள முடியும். இதேபோன்று நள்ளிரவில் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு செல்ல வாகன ஏற்பாடும் செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தங்கம் விலை உயர்வு பற்றி பேசும்போது, "கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி அட்சய திருதியை நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.53,280 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ. 6,660க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 72,040க்கும், ஒரு கிராம் ரூ.9,005க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ரூ.18,970 அதிகம் ஆகும். அதாவது ஒரே ஆண்டில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது." என்றார்.
இன்றைய தங்கம் விலை என்ன?
நாளுக்கு நாள் உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூபாய் 520 குறைந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தங்கம் விலை நிலவரம்
2021: கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 35,936க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது அட்ஷய திருதியை நாளில் தங்க நகைகள் ரூ.9,000 கோடிக்கு விற்பனை நடந்தது. அதாவது 20 சதவீதம் அளவு கூடுதலாக விற்பனை இருந்தது.
2022: கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ.40,800க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ரூ.11,000 கோடி என்ற அளவில் தங்க நகை விற்பனை நடந்தது. அப்போது 30 சதவிதம் கூடுதலாக தங்கம் விற்பனை இருந்தது.
2023: கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ.44,480க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது அட்சய திருதியை நாளான அன்று ரூ.14,000 கோடிக்கு தங்க விற்பனை நடந்தது. இதில் 40 சதவீதம் கூடுதலாக விற்பனை நடந்திருந்தது.
2024: கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 58,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் ரூ. 15,000 கோடி என்ற அளவில் தங்க நகை விற்பனை இருந்தது. இது 30 சதவீதம் கூடுதல் ஆகும்.














Click it and Unblock the Notifications