கே.என்.நேருவுக்கு எதிராக விஜய் தலைமையிலான அரசு எடுத்த அதிரடி முடிவு.. உயர்நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சென்னை: தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2538 நகராட்சித்துறை பொறியாளர்கள் பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரினை கூறி, முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு(அன்றைக்கு அமைச்சர்) மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தவெக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 2021 முதல் 2025 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2 ஆயிரத்து 538 உதவி என்ஜினியர்கள், இளநிலை என்ஜினியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு திமுக ஆட்சி காலத்தில் கடிதம் அனுப்பியது. ஆனால வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை..இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் மீது அ.தி.மு.க. எம்.பி., இன்பதுரை நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பி உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.என்.நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு, நேற்று (ஜூன் 23-ந்தேதி) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, "லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த (தி.மு.க.,) ஆட்சியின்போது தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கே.என்.நேரு தரப்பு, "ஆட்சி மாறினாலும், முந்தைய அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக தற்போதைய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதான வழக்கில் எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதையடுத்து, நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், தி.மு.க. ஆட்சியின்போது தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் வருகிற ஜூலை 10-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














Click it and Unblock the Notifications