ட்ரம்ப் கொஞ்சம் சும்மா இருங்களேன்.. தங்கம், வெள்ளி விலை இனி படக்குனு சரியும்? எக்ஸ்பர்ட்ஸ் வார்னிங்
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த இரண்டு நாட்களாக திடீர் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து ஏற்றம் மட்டுமே காணப்பட்ட நிலையில் ஏற்பட்ட இந்த விலை வீழ்ச்சி, இனி விலை சரிவை நோக்கிச் செல்லுமா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளது. இந்நிலையில், தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு இரண்டு காரணங்களே உள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
சர்வதேச அரசியல் பதற்றங்கள், போர் சூழல், பொருளாதார நிச்சயமற்ற நிலை போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. மேலும், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 9 ஆயிரம் வரை உயர்வு என்ற உச்சத்தையும் தொட்டது.
பங்குச் சந்தை மற்றும் பிற முதலீட்டு சந்தைகளில் உள்ள சிக்கல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் அதிகமாக பணம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்துக்கான தேவை அதிகரித்து, விலையும் தொடர்ந்து உச்சத்தை எட்டியது.

வெள்ளி விலை உயர்வு
அதேபோல், வெள்ளி விலையும் சமீப காலமாக வேகமான உயர்வைக் கண்டது. வெள்ளி ஒரு பக்கம் முதலீட்டு பொருளாக இருந்தாலும், மறுபக்கம் தொழில் பயன்பாட்டுக்கான முக்கிய உலோகமாகவும் இருக்கிறது. குறிப்பாக மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிப்பதால், வெள்ளிக்கான தொழில் தேவை கடுமையாக உயர்ந்தது. இதனால், தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியிலும் முதலீடு செய்யும் போக்கு உருவாகி, அதன் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்தது.
தங்கம் வெள்ளி சந்தை
இந்தச் சூழலில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,000-க்கும் மேல் உயர்ந்து, ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் தொட்டது. இது பொதுமக்களையும் நகை வியாபாரிகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால், இந்த உச்சத்துக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை சரிவு
இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,200 வரை தங்கம் விலை குறைந்துள்ளதுடன், வெள்ளி கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அளவிலான சரிவு ஏன் ஏற்பட்டது என்பதே இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமெரிக்க பொருளாதார சூழல் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர் கெவின் வார்ஷை பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ட்ரம்ப் ஆதரவாளராகக் கருதப்படும் கெவின் வார்ஷ், டாலரின் மதிப்பை உயர்த்தும் வகையில் கடுமையான நாணயக் கொள்கைகளை அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உருவானது. டாலர் மதிப்பு உயர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் தேவை குறையும் என்பதால், அதன் தாக்கம் விலைகளில் உடனடியாக பிரதிபலித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம், வெள்ளி விலை
இதற்குப் பிறகு இன்னொரு முக்கிய காரணமாக முதலீட்டாளர்களின் லாபம் எடுக்கும் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், ஏற்கெனவே முதலீடு செய்திருந்தவர்கள் தங்களின் லாபத்தை உறுதிசெய்ய, சிறிதளவு விற்பனை செய்யத் தொடங்கினர். இந்த விற்பனை அழுத்தம் சந்தையில் அதிகரித்ததால், விலைகள் குறைந்ததாக கூறப்படுகிறது. ஆக, சமீபத்திய இந்த சரிவு நிரந்தரமா அல்லது தற்காலிகமானதா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால், சர்வதேச பொருளாதார முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நகர்வுகளே, இனி தங்கம், வெள்ளி விலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications