ரெண்டு நாள்ல அழுகிப் போற தக்காளிக்கே வாழ்வு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? படக்குனு எழுந்துருச்சே!
சென்னை: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர்பதற்றம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு ஆகிய காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக அதிக ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணிக்கலாம் என்கின்றனர்.
கடந்த சில நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. பங்கு மற்றும் பொருள் வர்த்தக சந்தையில் தங்கம் விலை சுமார் 0.50 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,54,668 என்ற அளவிற்கு சென்றுள்ளது.

அதேபோல் வெள்ளி விலையும் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து கிலோவுக்கு ரூ.2,55,735 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சமீபத்தில் ஒரு மாத உயரத்தை எட்டிய பின்னர் சிறிய சரிவைக் கண்டுள்ளது.
தங்கம் விலை
இதற்குக் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவு உலக சந்தைகளில் முதலீட்டாளர்களின் முடிவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பு சற்று குறைந்திருப்பதும் தங்க விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிய மாற்றமின்றி ஒரு பீப்பாய்க்கு சுமார் 95 டாலர் என்ற நிலையில் உள்ளது.
வெள்ளி விலை
எண்ணெய் விலையும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஈரானுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விரைவில் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உலக சந்தையில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிரந்தர அமைதி ஏற்படும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் பணவீக்கம் குறையும் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீதான அழுத்தமும் தளர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து பணவீக்கம் மேலும் உயரும் அபாயமும் உள்ளது.
தங்க சந்தையில் தாக்கம்
பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை அடுத்த சில நாட்களிலும் அதிக ஏற்றத் தாழ்வுடன் காணப்படலாம். டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையின் முடிவு போன்றவை இந்த விலை மாற்றங்களில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. சில நிபுணர்கள், விலை குறையும் நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவது நல்ல முதலீட்டு யுக்தியாக இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1,57,000 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2,61,000 வரை செல்லக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications