தங்கம் இனி தள்ளாடாது! உலக மார்க்கெட்டில் இனி தங்கம் தான் தாதா! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய பொருட்கள் வர்த்தக சந்தையான எம்.சி.எக்ஸ் (MCX) திங்கட்கிழமை (அக்டோபர் 20) காலை வணிகத்தில் தங்கத்தின் விலை சிறிய அளவில் உயர்ந்தது. டிசம்பர் மாத ஒப்பந்த தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,28,005 ஆக இருந்தது. இது 0.78 சதவீத உயர்வாகும். அதே நேரத்தில், வெள்ளி விலையும் 0.41 சதவீதம் உயர்ந்து கிலோகிராமுக்கு ரூ.1,57,240 என பதிவாகியுள்ளது.
இந்த உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உலகளாவிய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு சிறிதளவு தளர்வடைந்தது தான். டாலர் பலவீனமடையும் போது தங்கத்தின் தேவை பொதுவாக அதிகரிக்கும். அதோடு, உள்ளூர் சந்தையிலும் தங்கத்துக்கு வலுவான "ஸ்பாட் டிமாண்ட்" (spot demand) காணப்பட்டது.
இதனால் தங்க விலை மீண்டும் உயர்வைச் சந்தித்தது. உலக சந்தையில் கடந்த வாரம் தங்கம் விலை கடுமையாக சரிந்திருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக சுங்கக் கட்டணங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் முதலீட்டாளர்களை ரிஸ்க் ஆசெட்களாகும் பங்குச் சந்தைகளில் நுழையச் செய்ததால் தங்கம் விற்பனை அழுத்தத்துக்குள்ளானது.

இந்தியாவில் தங்கம் விலை
அதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அமெரிக்க சந்தையில் 2 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், தற்போது முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்கத் தொடங்கியுள்ளனர். ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறும் போது, "தங்கம் 4,255 டாலர் வரை மீண்டு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க உள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர். இதனால் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது," என்றார்.
எம்.சி.எக்ஸ் தங்கம்
இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களில் தங்கம் விலை 70 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் தங்க ETF முதலீட்டுகளில் அதிக நுழைவு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்க முதலீடு
SMC குளோபல் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வுத் தலைவர் வந்தனா பார்தி கூறியதாவது, "தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களில் அதிகமாக உயர்ந்துள்ளன. சிறிய அளவு விலை சரிவு ஏற்பட்ட பின் தான் தங்கத்தில் புதிய முதலீடுகளைத் தொடங்குவது நல்லது. ரூ.1,18,000 முதல் ரூ.1,20,000 வரை விலை குறைந்தால் அது நல்ல வாங்கும் நிலையாகும்," என்றார். மேலும், "இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ரூ.1,35,000 வரை உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், வெள்ளி ரூ.1,75,000 முதல் ரூ.1,80,000 வரை செல்லலாம்," என தெரிவித்தார்.
முதலீட்டாளர் ஆலோசனை
இதேபோல் SS WealthStreet நிறுவனர் சுகந்தா சச்சதேவா பேசும் போட்து, "தங்கம் தற்போது 'overbought' நிலையில் உள்ளது. எனவே குறுகிய காலத்தில் சிறிய சரிவு நிகழலாம். ஆனால், நீண்ட காலத்தில் தங்கம் ரூ.1,45,000 முதல் ரூ.1,50,000 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்டத்துக்கட்டமாக வாங்குவது, அதாவது விலை சிறிது குறையும் போது வாங்குவது தான் சரியான நிதானமான முதலீட்டு முறையாகும்," என்றார். இதனால், தீபாவளி நெருங்கும் வேளையில் தங்கம் விலை மீண்டும் மேலேறியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் விலைச் சரிவுக்காக காத்திருந்து தங்கம் வாங்குவது நல்ல முடிவாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications