Gold rate: தங்கம் விலை பெரிய வீழ்ச்சியை சந்திக்க போகுதா? கடந்த காலத்தில் இதுதான் நடந்து இருக்கு! ஆஹா
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு நகை பிரியர்களை கதி கலங்க வைத்திருக்கிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை இப்படியேதான் போகுமா இல்லை விலை வீழ்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா என நகை பிரியர்கள் திகிலுடன் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த காலங்களில் தங்கம் விலை இப்படி உச்சம் தொட்ட போதெல்லாம் அடுத்து என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கடந்த காலங்களிலும் தாறுமாறாக உயர்வு
தங்கம் விலை இப்படி தாறுமாறாக உயர்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக இரண்டு தடவை தங்கம் விலை இப்படி கண்மூடித்தனமாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 1979-1980 காலக்கட்டம் மற்றும் 1930களில் என இரண்டு முறை தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
1978 மற்றும் 1980களில் உலகளாவிய தங்கத்தின் விலைகள் ஒரு அவுன்ஸ் சுமார் $200 இலிருந்து $850க்கும் மேலாக நான்கு மடங்கு அதிகரித்தன. இரட்டை இலக்க பணவீக்கம், எண்ணெய் விலை கொடுத்த அதிர்ச்சி மற்றும் ஈரானிய புரட்சி மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பு உள்ளிட்ட புவிசார் அரசியல் நெருக்கடிகளின் நிலையற்ற நிலை உள்ளிட்டவற்றால் தங்கம் விலை இப்படி கடுமையாக உயர்ந்தது.
ஏறிய வேகத்தில் பாதியாக குறைந்தது
இந்தியாவில், தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது. எனினும், உள்நாட்டு விலைகள் சர்வதேச சந்தை நிலவரத்தையே பிரதிபலித்தது. இதனால் கடுமையாக தங்கம் விலை உயர்ந்தது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை ரூ.937ல் இருந்து 1,330 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட 45 சதவீதம் விலை உயர்ந்தது.
எனினும், அமெரிக்க மைய வங்கி தலைவர் பால் வாக்கர் வட்டி விகிதத்தை கடுமையாக உயர்த்தியதும் தங்கத்தின் மகிமை மங்கிவிட்டது. 1982 காலக்கட்டத்தில் தங்கம் விலை உச்சத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துவிட்டன.
1930-இல் தங்கம் விலை 70% உயர்ந்தது
1932 காலக்கட்டத்தில் மந்தநிலையின் போது, உலகம் வங்கிச் சரிவுகளையும் பணவாட்டத்தையும் எதிர்கொண்டது. 1933ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸவெல்ட், தனியார்கள் தங்கத்தை உரிமையாக்கி கொள்வதை தடை செய்தார். மேலும் தங்கத்தின் மதிப்பை அவுன்ஸ் ஒன்றிற்கு $20.67ல் இருந்து $35டாலராக உயர்த்தினார்.
இந்த கொள்கை மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை 70 சதவீதம் உயர்ந்தது. வரலாற்றில் மிகப்பெரிய விலை உயர்வாக இது அமைந்தது. இந்த விலை உயர்வானது சந்தை மதிப்பின் அடிப்படையில் அமையாமல், நிர்வாக அடிப்படையில் அமைந்து இருந்தது. 1971ஆம் ஆண்டு தங்கம் முழுமையாக தாராளமயமாக்கப்படும் வரை, பல ஆண்டுகளாக விலைகள் நிலையாக இருந்தன.
தங்கம் விலை குறையுமா?
தங்கம் விலை கடந்த காலங்களில் கடுமையாக உயர்ந்த போதெல்லாம் மீண்டும் விலை உயர்வு சரிந்து ஒரு நிலையான விலை நிலவரத்திற்கே சென்றுள்ளது. அதாவது மத்திய வங்கிகள் அதிக வட்டி விகிதம் போட்டதும் விலை சரிந்துள்ளது. 1930ல் விலை உயர்வு என்பது கொள்கை மாற்றங்களால் ஏற்பட்டது.
1980ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு என்பது பணவீக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. தற்போது ஏற்பட்டு இருக்க கூடிய விலை உயர்வானது பாலிசியில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச அச்சம் காரணமாக உள்ளது. கடந்த காலங்களை போல இல்லாமல் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளே தங்கத்தை வாங்கி குவிக்கின்றன.
பணவீக்கம் குறைந்தால்..
எடுத்துக்காட்டாக இந்திய ரிசர்வ் வங்கி கூட தனது தங்க கையிருப்பை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 850 டன்களுக்கு மேல் தங்க கையிருப்பை அதிகரித்து, டாலர் சொத்துக்களிலிருந்து விலகிச் சென்றுள்ளது. தற்போதைய சர்வதேச அளவில் நிலவும் பதற்றம் தணிந்தாலும் கூட பல்வேறு நிறுவன அமைப்புகளும் தங்கத்தை வாங்கி குவிப்பதால் விலையை தாங்கி நிற்கும் தூணாக இவை செயல்படக்கூடும்.
எனினும், பணவீக்கம் கடுமையாகக் குறைந்து உண்மையான விலைகள் உயர்ந்தால், தங்கம் 1980 ஐ போன்ற ஒரு திருத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications