விடாமல் அடிக்கும் டிராகன்.. தங்கத்தை கொத்தாக வாங்கி குவிக்கும் சீனா.. உலக மார்க்கெட்டே பதறுதே!
சென்னை: உலகப் பொருளாதாரச் சந்தையில் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றுச் சிறப்புமிக்க $4,000 டாலராக உயர்ந்துள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் சீனாவில் அதிகரித்து வரும் தேவை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தங்கத்தை வாங்குவதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை உயர்வு
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மந்தநிலை, மற்றும் அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற உலகளாவிய கவலைகளின் பிரதிபலிப்பே இந்த தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தங்கம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. டாலர் அல்லது பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்று மக்கள் பயப்படும்போது, அவர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள்.

இந்தத் தங்க விலை உயர்வில் சீனாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டிலிருந்து அந்நாட்டின் மத்திய வங்கி தனது தங்க இருப்புக்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை சீனா குறைத்து வருகிறது.
சீனா தங்கம் முதலீடு
மேலும், சீன மக்கள் தங்கத்தை ஒரு முதலீட்டு விருப்பமாக மீண்டும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற நகரங்களில் உள்ள நகைக் கடைகள், விலை அதிகமாக இருந்தாலும் தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. பல வாங்குபவர்களுக்கு புதியதாக வாங்க முடியாத சூழலில், சிலர் பழைய தங்க ஆபரணங்களை புதியவற்றிற்காக மாற்றிக்கொள்கின்றனர்.
சீனா சுரங்கங்கள்
தங்கத்தின் உலகளாவிய தேவை வலுவாக இருக்கும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பால், சீன தங்கச் சுரங்க நிறுவனங்களின் பங்குகளும் இந்த விலை உயர்வுக்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளன. சீனாவின் சுரங்கங்கள் இதனால் தங்கம் எடுக்கும் வேகத்தை அதிகரித்துள்ளன.
பல உலகளாவிய விவகாரங்கள் இந்தத் தங்க விலை உயர்வுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பது, சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.
உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடான சீனா, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் தனது கையிருப்பை குறைக்கும் நோக்கில், தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை, சீன மக்கள் வங்கி (PBOC) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீனா மிக எளிதாக தங்கம் வாங்க முடியும். அதை நகைகளாக மாற்றி எளிதாக விற்பனையும் செய்ய முடியும். இந்த வரைவு திட்டத்தின்படி, விரைவான ஒப்புதல் அமைப்பான "பலதரப்பு பயன்பாட்டு அனுமதிச் சீட்டுகள்" (multi-use permits) வழங்கும் துறைமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனா உத்தேசித்துள்ளது. மேலும், இந்த அனுமதிச் சீட்டுகளின் கால அளவை ஒன்பது மாதங்களாக நீட்டிக்கவும், ஒரு சீட்டை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கான வரம்புகளை நீக்கவும் சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
சீனாவின் தங்கம் திட்டம்
இந்த நடவடிக்கை, 2016-ஆம் ஆண்டு PBOC எடுத்த ஒரு முயற்சியின் தொடர்ச்சியாகும். அப்போது, எல்லை தாண்டிய தங்க வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக ஆவணப்பணிகளைக் குறைத்து, இறக்குமதியை விரைவுபடுத்த சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தனது தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் சேர்த்து, தொடர்ந்து பத்தாவது மாதமாக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. அதேசமயம், முதலீட்டுத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான உள்நாட்டு தேவையும் வலுவாக உள்ளது.
மத்திய வங்கிகளின் கொள்முதல், அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் இந்த ஆண்டு தங்கத்தின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, மே மாதத்தில் தனது தங்க இருப்பை பல மாடனுக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications