டிரம்ப் எடுத்த பிரம்மாஸ்திரம்.. அவசர அவசரமாக தங்கத்தை திருப்பி வாங்கிய RBI.. மோடியின் தரமான மூவ்
மாஸ்கோ: ரஷ்யாவின் சர்வதேச சொத்துக்கள் பலவற்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் முடக்கியதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தனது வெளிநாட்டு தங்க முதலீடுகளை உடனே திருப்பி எடுக்க தொடங்கி உள்ளது. ஆர்பிஐ தனது தங்க இருப்புக்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக தற்போது நாட்டிலேயே வைத்துள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை, கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ரஷ்யாவின் எண்ணெயையை வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தண்டித்து வருகிறார். இப்போது ரஷ்யாவின் சர்வதேச சொத்துக்கள் பலவற்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் முடக்கி உள்ளன. இதைதடுத்து ரஷ்யாவுடன் உறவு வைத்துக்கொள்ளும் மற்ற நாடுகளின் சொத்துக்களும் முடக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு கருதி உலக நாடுகள் தங்களின் தங்கத்தை வேறு நாடுகளில் சேமிப்பு கிடங்குகளில் வைக்கும் வழக்கம் உள்ளது. இந்தியாவும் கூட பல ஆயிரம் டன் தங்கத்தை இதேபோல் கிடங்குகளில் வைத்து வருகிறது. இதைத்தான் தற்போது இந்தியா திருப்பி எடுக்க தொடங்கி உள்ளது.
தங்கத்தை திருப்பி எடுக்கும் ஆர்பிஐ
ஏப்ரல் மாதம் தொடங்கிய நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், ரிசர்வ் வங்கி சுமார் 64 டன் தங்கத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அதன் அரை ஆண்டு வெளிநாட்டுச் செலாவணி இருப்புக்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் இறுதி நிலவரப்படி, மொத்த இருப்புக்களில் தங்கத்தின் மதிப்பு 13.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாத இறுதியில் 11.70 சதவீதமாக இருந்தது.
வழக்கமாக, ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்புகளில் ஒரு பகுதியை இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச தீர்வக வங்கி ஆகியவற்றில் வெளிநாடுகளில் வைத்திருக்கும். செப்டம்பர் இறுதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 880 டன் தங்கத்தை வைத்திருந்தது. இதில் 576 டன் உள்நாட்டில் சேமிக்கப்பட்டிருந்தது. இது ஒரு சாதனை அளவாகும்.
2022 செப்டம்பரில், உள்நாட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மொத்தத்தில் சுமார் 38 சதவீதமாக இருந்தது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட ஜி-7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவின் இருப்புகளை முடக்கிய பிறகு, இந்தியா தனது நாட்டின் தங்க சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்வதே இந்த நகர்வின் நோக்கமாக இருக்கலாம்.
இந்திய மத்திய வங்கி
கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய மத்திய வங்கி கிட்டத்தட்ட 280 டன் தங்கத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம், ரிசர்வ் வங்கி தனது இருப்புகளை பல்வகைப்படுத்துவது குறித்து மிகவும் கவனமாக முடிவெடுத்து வருவதாகக் கூறினார்.
அமெரிக்க டாலர்கள் மற்றும் அது தொடர்பான சொத்துக்கள் மீதான சார்பைக் குறைப்பதற்காக உலக அளவில் தங்கம் வாங்கும் முன்னணி வங்கிகளில் ரிசர்வ் வங்கியும் ஒன்று. அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் அதன் இருப்புகளை சீராகக் குறைத்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதிக்கும் முன்பே இந்த செயல்முறை தொடங்கியது.
அக்டோபர் 17 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த வெளிநாட்டுச் செலாவணி இருப்புக்கள் 702.3 பில்லியன் டாலர்களாகும். இது உலகின் நான்காவது பெரிய இருப்பு ஆகும். மேலும், 11 மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளுக்கு போதுமானது.












Click it and Unblock the Notifications