இதெல்லாம் டீசர்தான்.. இப்படியே போனால்.. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடையும்.. வல்லுநர் வார்னிங்
சென்னை: தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 10 கிராமுக்கு ₹2,430 உயர்ந்துள்ளன. நேற்று 10 கிராமுக்கு ₹1,01,052 ஆக வர்த்தகமானது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும், எதிர்பார்க்காத உச்சத்தை அடையும் என்று எம்சிஎக்ஸ் கணிப்பு தெரிவித்து உள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான வெள்ளியின் ஒப்பந்த விலைகள் கிலோவுக்கு ₹390 அல்லது 0.34% குறைந்து ₹1,14,491 ஆக வர்த்தகமானது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,227 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,374 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,744 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை ஒப்பந்தம்
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. அக்டோபர் தங்க எதிர்கால ஒப்பந்தம் 0.33% அதிகரித்து 10 கிராமுக்கு ₹1,01,798 ஆக நிலைபெற்றது. செப்டம்பர் வெள்ளி எதிர்கால ஒப்பந்தம் 0.52% அதிகரித்து கிலோவுக்கு ₹1,14,881 ஆக நிறைவடைந்தது.
இருப்பினும், உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் சந்திப்பார் என்ற செய்தி வெளியானதும், பாதுகாப்புத் தேவை குறைந்ததால், ஒரு அவுன்ஸ் தங்கம் $3,380-க்கு கீழ் சரிந்தது. கடந்த வாரம், அமெரிக்க வர்த்தக வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையும், டாலர் குறியீட்டில் லாபப் பதிவும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை அதிகரித்தன. தங்கம் சர்வதேச சந்தைகளில் வாழ்நாள் உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி ஒரு ட்ராய் அவுன்ஸ் $38.50-ஐ தாண்டியது.
தங்கம் விலை உயரும்
சர்வதேச தங்கச் சந்தையில் அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) அடுத்தகட்ட முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அமெரிக்கா எடுக்கவுள்ள நடவடிக்கைகள், நடப்பு ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலையை அசுர வேகத்தில் அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியின் பெஞ்ச்மார்க் ஃபெடரல் ஃபண்ட்ஸ் விகிதங்கள், தொடர்ந்து ஆறாவது முறையாக 4.25% முதல் 4.5% என்ற நிலையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளன. இது தற்காலிகமான முடிவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில், அதாவது இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விகிதங்கள் குறைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை: ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம்
ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை வட்டி விகிதக் குறைப்பு இருக்கும். எனினும், 2026ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு கணிப்பு 25 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026ஆம் ஆண்டிலும் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை ஒரு அடிப்படை புள்ளி கூட குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் சேமிப்புகளில் முதலீட்டாளர்கள் பெறும் வருமானம் குறையும். இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் டாலரை விட்டு வெளியேறி, தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இது டாலருக்கான தேவையை குறைத்து, தங்கத்தின் மதிப்பை அதிகரிக்கும். தற்போதைய நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமலும், அதிகரிக்கப்படாமலும் உள்ளது டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மையை நீடித்து தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
தங்கம் விலை என்ன?
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை, மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் காணப்படும் பலவீனமான அறிகுறிகள் ஆகியவை டாலரின் தேவையை குறைத்து அதன் மதிப்பை வலுவிழக்கச் செய்கின்றன. இந்தச் சவாலான சூழல் நீடிப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. இந்த போர்கள் உலகப் பங்குச் சந்தைகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.












Click it and Unblock the Notifications