வீட்டு லாக்கர்களில் முடங்கிய தங்கம்.. தலையை பிய்த்துக்கொள்ளும் மத்திய அரசின் டாப் நிர்வாகிகள்.. ஏன்?
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து தினசரி செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், இறக்குமதி வரி திருத்தங்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. விலை உயரும்போது, நம் வீடுகளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பும் காகித அளவில் (On paper) உயர்கிறது. ஆனால், இதில் இருக்கும் ஒரு பெரிய யதார்த்தம் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் பல டன் தங்கம் யாருக்கும் பயன்படாமல் வீட்டு லாக்கர்களிலும், பீரோக்களிலும் பல வருடங்களாக சும்மா பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி முடங்கிக்கிடக்கும் தங்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் கொண்டு வர இந்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படும் நிதித் திட்டங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது. அதுதான் 'கோல்ட் மானிடைசேஷன் ஸ்கீம்' (Gold Monetisation Scheme - GMS) எனப்படும் 'தங்க முதலீட்டுத் திட்டம்'.

கோல்ட் மானிடைசேஷன் திட்டம் என்றால் என்ன?
மிகவும் எளிமையாகச் சொன்னால், உங்கள் வீட்டில் சும்மா இருக்கும் தங்க நகைகள், நாணயங்கள் அல்லது கட்டிகளை (அவற்றில் இருக்கும் கற்கள் மற்றும் தூசிகளை நீக்கிய பிறகு) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் டெபாசிட் செய்யலாம்.
அங்கு உங்கள் தங்கத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டு, அது சுத்தமான தங்கமாக மாற்றப்படும். பின்னர், அந்தத் தங்கத்தின் எடைக்கு நிகராக உங்கள் கணக்கில் (கிராம் கணக்கில்) வரவு வைக்கப்படும்.
குறைந்தபட்ச முதலீடு: 10 கிராம் தங்கம்.
அதிகபட்ச வரம்பு: எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் (No upper limit).
வட்டி விகிதம்: ஆண்டுக்கு தோராயமாக 2.25% முதல் 2.5% வரை வட்டி வழங்கப்படும்.
முதிர்வுக் காலம்: திட்டம் முடிவடைந்ததும், நீங்கள் முதலீடு செய்த தங்கத்தை மீண்டும் தங்கமாகவோ அல்லது அன்றைய சந்தை மதிப்புக்கு நிகரான பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
கேட்பதற்கு மிகச் சிறந்த திட்டமாகத் தெரிகிறது அல்லவா? சும்மா இருக்கும் தங்கத்திற்கு வட்டியும் கிடைக்கிறது, அதே நேரத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதியும் குறையும். பிறகு ஏன் இந்தத் திட்டம் மக்களிடம் எடுபடவில்லை?
மக்கள் ஏன் இந்தத் திட்டத்தைத் தவிர்க்கிறார்கள்?
பொருளாதார ஆலோசகர்கள் இதற்கான காரணத்தை சொல்கிறார்கள்..
1. தங்கம் என்பது வெறும் பொருளல்ல, அது ஒரு சென்டிமென்ட்!
இந்திய குடும்பங்கள் தங்கத்தை வெறும் லாபம் தரும் முதலீடாகப் பார்ப்பதில்லை. அதை அவசர கால பாதுகாப்பு அரணாகவும், பரம்பரைச் சொத்தாகவும், தலைமுறைகளைக் கடந்து செல்லும் குடும்ப பாரம்பரியமாகவும் பார்க்கிறார்கள். தங்கம் என்பது இந்தியர்களுக்கு வெறும் நிதி சார்ந்த சொத்து அல்ல; அது உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார ரீதியான சொத்து.
2. நகையை உருக்குவதில் இருக்கும் பயம்
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தைக் கொடுக்கும்போது, அது உருக்கப்பட்டு தரமான தங்கக் கட்டிகளாக மாற்றப்படும். நிதிச் செயல்பாடுகளுக்கு இது தேவை என்றாலும், மக்களுக்கு இதில் உடன்பாடில்லை. நம் வீட்டு நகைகள் வெறும் உலோகமல்ல; அவை திருமணம், காதுகுத்து, அல்லது முன்னோர்கள் கொடுத்த பரிசுகளின் நினைவுகள். அவற்றை உருக்குவதை மக்கள் மனரீதியாக ஏற்பதில்லை. அதற்குப் பதிலாக, பழைய நகையைக் கொடுத்துவிட்டு புதிய டிசைன்களில் நகை வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள்.
3. குறைவான வட்டி விகிதம்
இந்தத் திட்டம் வழங்கும் 2% முதல் 2.5% வட்டி என்பது, மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தங்கம் விலை எப்படி இருந்தாலும் நீண்ட காலத்தில் உயரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதால், அதை வட்டிக்குக் கொடுத்து லாக் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
'தங்கக் கடன்' என்னும் எளிய மாற்று வழி
இந்திய குடும்பங்களுக்கு ஏற்கனவே அவசர காலங்களில் தங்கத்தைப் பயன்படுத்த 'தங்கக் கடன்' (Gold Loan) என்ற எளிய வழிமுறை பழகிவிட்டது.
திட்டங்களில் நிரந்தரமாக தங்கத்தை முடக்குவதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து, உடனடியாகக் கடன் பெற்று, பிறகு பணத்தைக் கட்டி நகையை அப்படியே மீட்டுக்கொள்ள விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு நகையின் மீதான உரிமையையும், அவசர கால நெகிழ்வுத்தன்மையையும் (Flexibility) கொடுக்கிறது.
தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதில் பெரும்பாலானவை நாட்டின் பொருளாதார புழக்கத்திற்குள் வராமல் லாக்கர்களிலேயே தூங்கிக் கொண்டிருக்கின்றன. முடங்கிக்கிடக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வர GMS திட்டம் முயன்றாலும், இந்தியர்களின் 'தங்க சென்டிமென்ட்டை' வெல்வது அந்தத் திட்டத்திற்கு இன்னும் சவாலாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications