Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்.. கிடுகிடு வளர்ச்சியில் இலங்கை-அம்பாந்தோட்டை துறைமுகம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: சீனாவின் பெல்ட் மற்றும் சாலை இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) பல சந்தர்ப்பங்களில் அதன் செயல்பாடுகளுக்காக சர்வதேச நாடுகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இலங்கையிலுள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை அது கையில் எடுத்து புயல் வேகத்தில் மேம்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இப்போது இந்த துறைமுகத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த துறைமுகம் சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (சி.எம்.போர்ட்) க்கு இலங்கை அரசாங்கத்தால் 99 ஆண்டு குத்தகைக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டாலருக்காக ஒப்படைக்கப்பட்டது.

சீனா வணிக துறைமுக ஹோல்டிங்ஸ் நிறுவனம் (சி.எம்.போர்ட்) மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் (எஸ்.எல்.பி.ஏ) ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தை நியாயமற்ற ஒப்பந்தமாகவே பலரும் கருதினர். இந்த துறைமுகத்தில், சீன அரசுக்கு சொந்தமான நிறுவனமான சி.எம்.போர்ட் தற்போது ஒட்டுமொத்தமாக 80 சதவீத பங்குகளையும், எஸ்.எல்.பி.ஏ-க்கு 20 சதவீதத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hambantota port in Sri Lanka may strengthen China’s position in Indian Ocean

இதன் காரணமாகத் தான் சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிக் கொண்டது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், இப்போது பரவும் கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த துறைமுகத்திற்கு எதிர்ப்பு பெரிய அளவுக்கு இல்லை. தெற்கு இலங்கையில் அமைந்துள்ளது அம்பாந்தோட்டை துறைமுகம். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான சர்வதேச கப்பல்கள் செல்லக்கூடிய சூயஸ் கால்வாய் அருகே மலாக்கா நீர் இணைப்புக்கு அருகே அமைந்துள்ளது அம்பாந்தோட்டை துறைமுகம்.

36 ஆயிரம் கப்பல்களை கையாளும் வசதி கொண்டது இது. இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்த துறைமுகம் அந்த மார்க்கமாக செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதன் காரணமாக எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும். எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்த மண்டலத்தில் மிக முக்கியமான ஒரு துறைமுகமாக மாற்றிவிட வேண்டும் என்பதில் சீனா மும்முரம் காட்டி வருகிறது. சீனா இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது என்று இந்திய அரசு முயற்சி செய்தும் கூட அதை தடுக்க முடியவில்லை.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மட்டும்தான் அந்த நாட்டு துறைமுகத்திலேயே நெகட்டிவ் வளர்ச்சியை கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கப்பல்கள் வருகை குறைந்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகம் மேம்படுத்தப்படுவதால், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முக்கியத்துவம் இருக்காது என்று ஆசிய கடல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாகத்தான் இந்தியா உட்பட பல நாடுகளும் இந்த துறைமுகத்தில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி கொண்டு இருந்தன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்த துறைமுகத்தில் சீனா மூக்கை நுழைத்தது. இலங்கைக்கும் வேறுவழி தெரியவில்லை. எனவே 2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை சிஎம் போர்ட் அமைப்புக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது இலங்கை. துறைமுகம் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள 1,232 ஏக்கர் நிலமும் இந்த குத்தகையில் அடங்கும்.

இதையடுத்து சிஎம் போர்ட் சுமார் 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்தது. ஆனால் அதற்கு மேலும் முதலீடு தேவைப்பட்டது. அப்போதுதான் முழு அளவிலான துறைமுக நடவடிக்கைகளை அங்கே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. எனவே சுமார் 700 முதல் 800 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கூடுதலாக செலவிட்டது சிஎம் போர்ட்.

புதிய நிர்வாகத்தின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகம் வளர்ச்சியடைந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு அங்கு ரோல் ஆன் ரோல் ஆப் என்ற சரக்கு கையாளும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக வணிக வளர்ச்சி இரட்டிப்பானது. சுமார் 136 சதவீதம் அளவுக்கு கப்பல்களை கூடுதலாக கையாளும் திறமை வந்தது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அமர்ந்து அமைந்துள்ள இடம் என்பது வெறுமனே கப்பல் போக்குவரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கிடையாது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டுக்கும் பொதுவாகவே அது ஒரு சிறப்பான இடத்தில் அமைந்துள்ள துறைமுகமாக பார்க்கப்படுகிறது.

உலகத்தின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடம் சுயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா நீரிணை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி என்பார்கள். இதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள முக்கிய நாடுகளுக்கு இடையேயான கப்பல் வழித்தடம் அமைந்துள்ள பகுதி. இங்கே இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகள், கிழக்கு ஆபிரிக்க நாடுகள் போன்றவை வேகமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த காலகட்டத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைவாக இருப்பது, போர்ட் வசதிகள், அதிகப்படியான அளவுக்கு பொருட்களை சேமித்து வைக்கும் வசதி, எப்போதுமே சிறப்பான வானிலை நிலவுவது, உள்ளிட்டவை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை வருங்காலங்களில் மேலும் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள் இந்த துறை நிபுணர்கள்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் முக்கிய துறைமுகங்களில் இருந்து அம்பாந்தோட்டை நடு பகுதியில் அமைந்துள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பலில் அடைவதற்கு 11 நாட்கள் தேவைப்படும். சிங்கப்பூரில் இருந்து மூன்று நாட்கள் தேவைப்படும். துபாய் துறைமுகத்திலிருந்து 5 நாட்கள், கென்யாவின் மொம்பசா துறைமுகத்திலிருந்து 6 நாட்கள், தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தில் இருந்து 9 நாட்கள் என்ற தொலைவில் இருக்கிறது அம்பாந்தோட்டை துறைமுகம்.

அம்பாந்தோட்டை துறைமுகம் ரோல் ஆன் ரோல் ஆப் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அதாவது எவ்வாறு ஒரு பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுகின்றன எவ்வாறு கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பதை குறிக்கும் ஒரு தொழில்நுட்ப சொல் இதுவாகும். கிரேன்கள் மூலமாக பொருட்களை கப்பலில் தூக்கி வைப்பதற்கு பதிலாக, அப்படியே எளிதாக உருண்டு பொருட்கள் வெளியே வரும் வகையிலும் கப்பலில் ஏற்றும் வகையிலும் இருக்கக் கூடிய தொழில் நுட்பம்தான் இது.

கார்கள், டிராக்டர்கள் போன்ற சக்கரம் இருக்கக் கூடிய பொருட்களை வேறு யாருடைய துணையும் இல்லாமல் அந்த சக்கரத்தின் துணை கொண்டே கப்பலில் ஏற்ற முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு இந்த துறைமுகம் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கான பொருட்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

ரோன் ஆன், ரோல் ஆப் தொழில்நுட்பத்தின் மூலமாக நடைபெறும் சரக்கு கையாளும் நடைமுறை கடந்த ஆண்டு 44 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய வாகனங்களை, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கி, பிறகு மத்திய கிழக்கு, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு ரோல் ஆன், ரோல் ஆப் தொழில்நுட்பம் மிகவும் பயன்படுகிறது.

வெறும் துறைமுகம் கட்டுமானம் என்பதோடு மட்டுமில்லாமல் 300 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான முதலீட்டில் அம்பந்தோட்டை துறைமுகத்தின் அருகே, சீனாவைச் சேர்ந்த ஹேன்டோங் ஹேவுவா நிறுவனம், டயர் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறது. 9 மில்லியன் டாலர் மதிப்புள்ள டயர்களை, முதல் கட்டமாக அதிக ஏற்றுமதி செய்ய உள்ளது இந்த கம்பெனி.

இங்கு தொழில் துவங்குவதால் வரி சலுகைகளையும் பெறுகிறது. ஒரு பக்கம் வரி சலுகை, இன்னொரு பக்கம் இந்த துறைமுகத்தை பயன்படுத்தி செய்து கொள்ளும் வசதி போன்றவை அந்த சீன நிறுவனத்துக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த டயர் தொழிற்சாலை நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

இப்படியாக சீனா ஆதிக்கம் செலுத்தப் போகும் ஒரு துறைமுகம் பற்றி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச விவகார துறை நிபுணர்கள். இரண்டு வருடங்கள் முன்பு வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு துறைமுகம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதற்கு மேலே சொன்ன தகவல்கள் ஒரு உதாரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+